திருப்பூர்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பரிசோதனை மற்றும் மகளிருக்கான புற்றுநோய் ஆலோசனை முகாம் நடைபெற்றது. கடந்த மார்ச் 7ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம் 3 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது.இதில் 7999 ரூபாய் மதிப்பிலான கல்லீரல் மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதன் இறுதி நாளான நேற்று(மார்ச் 10) மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது மருத்துவர் ஈஸ்வரன் பேசுகையில்,"கடந்த மூன்று நாட்களாக 8 ரோட்டரி அமைப்புகள் இணைந்து கல்லீரல் பரிசோதனை மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை குறித்தன ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் 300 நபர்களுக்கு 7999 ரூபாய் மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
கல்லீரல் பாதிப்பு: இதனை தொடர்ந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் விவேகானந்தன் பேசுகையில்,"கல்லீரல் பாதிப்பு தற்போது அதிக அளவில் காணப்படுகிறது. இந்தியாவில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர்.
இது மட்டும் அல்லாது இந்தியாவில் 25 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய மூன்று காரணங்களில் உள்ளன, அதில் முதன்மையானது மது பானங்கள் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புதான்.
இன்றைய காலகட்டத்தில் மதுபானங்கள் மிக எளிதாக் கிடைக்கின்றது. இதனால் சிறுவயதிலேயே இளைஞர்கள் பலர் மதுபானங்களை அருந்தத் தொடங்கிவிடுகின்றன. இதன் காரணமாக 30 முதல் 35 வயதுக்குள் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உடல் ஆரோக்கியத்தை இழக்கின்றனர்.
பொதுவாக ஒரு நாளைக்கு 10 நோயாளிகளை நான் பார்க்கிறேன் என்றால் அதில், 7 நோயாளிகள் மதுபானங்கள் எடுத்துக்கொண்டதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம் மருத்துவச் செலவு செய்வதற்குக் கூட பணம் இருக்காது, இதனைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுபானங்களைக் குடிப்பதைக் குறைத்துக் கொண்டாலே பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.இந்த மதுபானங்கள் குடிப்பதால் கல்லீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை,மாறாகத் தலை முதல் கால் வரை புற்றுநோய் பாதிப்பு, பாலியல் ரீதியான பிரச்சனைகள், மன அழுத்தம் உள்ளிட்ட பல வியாதிகள் ஏற்படும்.
கல்லீரலில் கொழுப்பு படிவதைப் பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதில் 25 சதவீதம் கல்லீரல் கொழுப்பு படிந்து பாதிக்கப்பட்ட நபர்கள், பின்னர் கல்லீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வருகிறார்கள். இதனை ஆரம்ப காலகட்டங்களில் தடுக்கலாம் , அதற்குத் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொண்டால் கூட கொழுப்பு படிந்து தவிர்க்க முடியும், மேலும் உணவுக் கட்டுப்பாடும் அவசியாகும்" என்றார்.
இதையும் படிங்க: ஆணுக்கு ஒருபடி அதிகமாகவே பெண்களால் முன்னேற முடியும் - அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஊக்கம்!