ETV Bharat / state

குழந்தைகளை வெளியே விடாதீர்கள்: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு! - Mayiladuthurai leopard photo

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 8:29 PM IST

மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரபூர்வ புகைப்படம் வெளியீடு
மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரபூர்வ புகைப்படம் வெளியீடு

Mayiladuthurai leopard photo: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை வெளியிட்டுள்ள மாவட்ட வனத்துறை மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மனித நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் கண்டிப்பாக 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் சுற்றித்திரியும் சிறுத்தையின் புகைப்படம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மயிலாடுதுறை மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 1,000 ஹெக்டர் அளவில் காப்புக்காடுகள் உள்ளது. இவை அனைத்தும் பெரும்பாலும் கடலோர வனப்பகுதிகளாக உள்ளன.

மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரபூர்வ புகைப்படம் வெளியீடு
மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரபூர்வ புகைப்படம் வெளியீடு

இங்குள்ள வனப்பகுதிகளில் நரி, புள்ளிமான் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. இதுவரை மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை போன்ற விலங்குகள் காணப்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இந்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை போன்ற விலங்கு பதிவாகி இருந்தது.

இதனையடுத்து காவல்துறையின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உடனடியாக வனத்துறையின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு, முதல் நடவடிக்கையாகச் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்வதற்காகத் தானியங்கி கேமராக்கள் சில இடங்களில் பொருத்தப்பட்டன.

மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரபூர்வ புகைப்படம் வெளியீடு
மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரபூர்வ புகைப்படம் வெளியீடு

அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமரா மூலம் ஏப்ரல் 3ஆம் தேதி இரவு சிறுத்தையின் உருவம் தெளிவாகக் கிடைக்கப்பெற்று உறுதி செய்யப்பட்டது. சிறுத்தையானது மனிதனின் அருகாமையைத் தவிர்க்கும் விலங்கு என்பதாலும், சிறு விலங்குகளையே வேட்டையாடும் தன்மை கொண்டதாலும், பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், தேவையற்ற மற்றும் அச்சம் தரக்கூடிய தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மனித நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் கண்டிப்பாக 10 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் கள நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், கூட்டம் சேர்ந்து கள நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யாது இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அத்துடன் சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்வித தகவல் கிடைத்தாலும் வனத்துறைக்கு, வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியலை 9994884357 என்ற எண்ணிலும், வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரனை 9080179807 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கிராம அளவில் இளைஞர்கள் தன்னார்வத்துடன் அரசுத் துறைகளின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு" அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 4 நாட்களாகப் போக்குகாட்டும் சிறுத்தை.. இறைச்சியுடன் காத்திருக்கும் வனத்துறையினர்: மீண்டும் அதே பகுதிக்குச் சிறுத்தை வருமா? - AROKIYANATHAPURAM Leopard Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.