ETV Bharat / state

"தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 9:15 PM IST

Etv Bharat
Etv Bharat

Anna University Vice Chancellor Velraj: தேசப்பற்று நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டதில் எந்த தவறும் இல்லை எனவும், தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை எனவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

"தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றத்தில் தவறு இல்லை" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்!

சென்னை: நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக இன்று (ஜன.23) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அதேசமயம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இந்தியத் தேசிய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கிண்டி பொறியியல் கல்லூரியின் ECE, CSE, IT துறை மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும்,மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் என அதன் முதல்வர் சுகந்தி துறைத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "அண்ணா பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் வந்திருந்தனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் 400 பேர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

2 மணி நேரம் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுப் பங்கேற்றனர். நாட்டுப்பற்று பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். தேசப்பற்று நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டதில் எந்த தவறும் இல்லை.

வருகை பதிவேடு என்று சொன்னால் மட்டுமே மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இல்லையென்றால் மாணவர்கள் வகுப்புகளுக்கும் செல்லாமல், வெளியில் சென்று விடுவார்கள் என்ற அடிப்படையில் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப் பதிவு என்று கூறப்பட்டது. தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக கும்கிகளின் உதவியை நாடிய ஒடிசா அரசு.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.