ETV Bharat / state

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி! - MK Stalin tribute to Pugazhenthi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 8:51 AM IST

MK Stalin tribute to Pugazhenthi
MK Stalin tribute to Pugazhenthi

MK Stalin: உடல்நலக்குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான என்.புகழேந்தி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருப்பினும், கட்சிப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கு திடீரென மயக்கமடைந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புகழேந்தி எம்எல்ஏ மறைந்த செய்தி அறிந்த அமைச்சர் பொன்முடி, உடனே அங்கு விரைந்து வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, புகழேந்தியின் உடல் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, ஏராளமான திமுகவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா ஆகியோரை ஆதரித்து, நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பரப்புரை கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து நேரடியாக காரில் விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அங்கு, கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைனையடுத்து, புகழேந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

மேலும், உயிரிழந்த புகழேந்தியின் உடலானது இன்று மாலை அவருடைய பூர்வீக ஊரான விழுப்புரம், பிடாகம் பகுதி அத்தியூர் திருவாதி என்கிற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரகம்.. ரகமாக... வாக்கு சேகரிக்கும் நாடாளுமன்ற வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.