சென்னை: ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய விண்ணப்பித்ததைச் சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில், யாத்திரைக்கு அரசு எதிராக இல்லை எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதிக்கோரி மனுதாரர் விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்செந்தூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி யாத்திரை குழு செயல்பட வேண்டும். கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திற்கு 3 வாகனங்களில் யாத்திரை குழு செல்ல வேண்டும். நாளை (ஏப்ரல் 17) மதியம் யாத்திரையை முடித்து கேரளாவிற்குச் செல்ல வேண்டும். யாத்திரை குழு அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: 'நயன்தாரா ஆடினால் பார்க்கும் நீங்கள்..இவர்களையும் பாருங்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ் - Actor Raghava Lawrence