ETV Bharat / state

"அடுத்த 7 தினங்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் கொடுத்த குளிர்ச்சி அறிவிப்பு! - TAMIL NADU WEATHER REPORT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 3:53 PM IST

அடுத்த 7 தினங்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 7 தினங்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு (Image Credit - ETV Bharat TamilNadu)

TN Weather Report: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் உள்ள ஓருசில இடங்களில் நாளை (மே 7) வெப்ப அலை வீசக்கூடும் என்று வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:

  • 5 செ.மீ - காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பேரையூர் (மதுரை)
  • 4 செ.மீ - ஆண்டிபட்டி (தேனி)
  • 3 செ.மீ - மாயனூர் (கரூர்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்)
  • 2 செ.மீ - சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திண்டுக்கல், கடவூர் (கரூர்), பொன்னையார் அணை (திருச்சி), தேக்கடி (தேனி)
  • 1 செ.மீ - அம்மாபேட்டை (ஈரோடு), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), எருமைப்பட்டி (நாமக்கல்), பெரியாறு (தேனி), வத்திராயிருப்பு (விருதுநகர்), சண்முகாநதி (தேனி), நாமக்கல் (நாமக்கல்), பென்னாகரம் (தர்மபுரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கூடலூர் (தேனி)

அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை விட அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.8 டிகிரி செல்சியஸ் (+7.5 டிகிரி செல்சியஸ்) ஈரோட்டில் 43.4 டிகிரி செல்சியஸ் (+5.9 டிகிரி செல்சியஸ்) மற்றும் திருப்பத்தூரில் 42.2° (+5.0 டிகிரி செல்சியஸ்) செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதேபோல அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 42.1 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையம் 41.8 டிகிரி செல்சியஸ், திருச்சி விமான நிலையம் மற்றும் திருத்தணியில் 41.7 டிகிரி செல்சியஸ், சேலம் மற்றும் பாளையம்கோட்டையில் 41.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 டிகிரி முதல் 26 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை மீனம்பாக்கத்தில் 39.4 டிகிரி செல்சியஸ் (+1.8 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.0 டிகிரி செல்சியஸ் (+0.6 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. ஆகவே, இன்று (மே 6) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

அதேபோல நாளை (மே 7) முதல் மே மாதம் 10ஆம் தேதி வரையிலும், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

அதேபோல நாளை (மே 7) மற்றும் நாளை மறுநாள் (மே 8) ஆகிய இருநாட்களும் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனைத் தவிர, நாளை (மே 7) ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை மறுநாள் (மே 8) தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுமட்டும் அல்லாது மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) ஆகிய 2 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

  • 08.05.2024 முதல் 10.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.
  • 06.05.2024 முதல் 10.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
  • இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) ஆகிய 2 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.
  • 06.05.2024 முதல் 10.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 41 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியசும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 39 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியசும் மற்றும் கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியசும் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: மே மாதம் 06ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 45 80 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55 முதல் 85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்று (மே 6) வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதேபோல நாளை (மே 7) தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதனைத் தவிர்த்து இன்று (மே 6) முதல் 08ஆம் வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) ஆகிய 2 தினங்களுக்கு தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல, வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Heat Stroke உயிரை கொல்லுமா.. அபாயம் குறித்து எச்சரிக்கும் மருத்துவர்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.