ETV Bharat / state

“ஆட்சியர் தரப்பில் கல்லூரிக்கு சீல் வைக்க அதிகாரம் இல்லை” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 4:46 PM IST

madurai-high-court-order-to-removal-of-seal-on-tenkasi-nursing-college
பாலியல் புகார்; தென்காசி தனியார் நர்சிங் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மதுரை ஐக்கோர்ட் உத்தரவு..

Lock and seal Tenkasi Nursing College: தென்காசி நர்சிங் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறையினரால் வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: தென்காசியைச் சேர்ந்தவர் பவித்திரா. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசியில் எனது கணவர் டிப்ளமோ நர்சிங் பாராமெடிக்கல் கல்லூரி வைத்து நடத்தி வருகிறார். அந்த கல்லூரியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் நர்சிங் மற்றும் லேப் டெக்னீசியன் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி ஒருவரால் கொடுக்கப்பட்ட பொய்யான புகாரில், எனது கணவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில், வருவாய்த் துறையினர் கல்லூரியை மூடி சீல் வைத்துள்ளனர். சீல் வைப்பதற்கு முன்பாக ஆய்வு செய்யவோ அல்லது விளக்கம் கேட்டோ எந்த நோட்டீஸும் அனுப்பவில்லை.

கல்லூரியின் உள்ளே தான் மாணவ மாணவிகளின் மதிப்பெண் சான்றுகள் மாற்றுச் சான்று என முக்கியமான ஆவணங்கள் உள்ளது. கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டதையே செய்தித்தாள்கள் மூலம்தான் தெரிந்து கொண்டோம். எனவே, கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜீவா ஆஜராகி, “தேர்வுகள் நெருங்கி வரும் சூழலில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கல்லூரி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவ - மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சீலை அகற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கில் தென்காசி மாவட்ட ஆட்சியர் தரப்பில் கல்லூரிக்கு சீல் வைப்பதற்கு எந்த அதிகாரம் இல்லை. எனவே, கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: பொன்முடியின் சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு.. எம்.எல்.ஏ பதவி குறித்து சட்டமன்றத்தை நாட நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.