ETV Bharat / state

ஆளுநர் முடிவெடுக்காதபோது உயர் நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா? - சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 4:49 PM IST

Updated : Feb 11, 2024, 1:02 PM IST

Etv Bharat
Etv Bharat

Madras High Court: நன்னடத்தையின் அடிப்படையில் சிறைவாசிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்காத நிலையில், உயர் நீதிமன்றம் விடுதலை தொடர்பாக பரீசிலிக்க முடியுமா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதிகளாக நீண்ட காலம் சிறையில் உள்ள எஸ்.ஏ.பாஷா, சாகுல் அமீது, ஜாகீர் உசேன், விஜயன், பூரிகமல் உள்ளிட்ட 49 சிறைவாசிகளை, நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி, அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்திருந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் 49 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரை ஆளுநர் முன் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலருக்கு இடைக்கால ஜாமீனும், சிலருக்கு விடுப்பு வழங்கியும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, விடுப்பில் உள்ள 10 பேர் உள்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நீண்ட நாள் சிறைவாசிகள் ஷம்மா உள்ளிட்ட இருவரின் விடுப்பை நீடிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து, இருவரின் விடுப்பை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், சிறைவாசிகள் விடுதலை குறித்த பரிந்துரை ஆளுநர் முன் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து உயர் நீதிமன்றமே பரிசீலிக்க முடியுமா என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக்கிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், அரசிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என்றும், ஆளுநரிடம் மட்டுமே நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதையடுத்து, முன்கூட்டி விடுதலை செய்வது குறித்த தீர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கனிமவள நிறுவனங்களிடம் ராயல்டி வரி வசூலிக்கத் தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

Last Updated :Feb 11, 2024, 1:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.