ETV Bharat / state

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்ததா சிறுத்தை? வனத்துறையினர் கூறியது என்ன? - MAYILADUTHURAI LEOPARD

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:26 PM IST

MAYILADUTHURAI LEOPARD
MAYILADUTHURAI LEOPARD

LEOPARD ROAMING: மயிலாடுதுறையில் சுற்றித் திரிந்த சிறுத்தையை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் அப்பகுதிகளைச் சேர்ந்த வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரி அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.

வனத்துறை அதிகாரி அபிஷேக் தோமர் பேட்டி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனை அடுத்து, சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்களாக தேடியும் சிறுத்தை கிடைக்காததால், ஆறாவது நாளாக மயிலாடுதுறை அடுத்த 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் என்ற கிராமத்தில் சிறுத்தை தென்பட்டதாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் எல்லைப் பகுதியான காஞ்சிவாய் பகுதி நண்டலாறு, வீரசோழன் ஆறு ஆகிய பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காளன் ஆகியோர் காஞ்சிவாய் பகுதியில் முகாமிட்டு சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே காஞ்சிவாய், பேராவூர், கருப்பூர் ஆகிய கிராமங்களைச் சுற்றியும், அப்பகுதியில் உள்ள நண்டலாறு மற்றும் அதன் இருபக்க கரைகளிலும் சென்சார் கேமராக்கள், தெர்மல் ட்ரோன் கேமரா பொருத்தியும், 16 கூண்டுகள் வைத்தும் உயிருடன் ஆடு, பன்றிகள் மற்றும் இறைச்சிகளைக் கூண்டுகளில் வைத்தும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், கோயம்புத்தூரில் இருந்து WWF - INDIA நிபுணர் குழு 30 கேமரா ட்ராப்புகளுடன் களத்தில் பணியைத் தொடங்கி உள்ளனர். இருப்பினும், சிறுத்தையைப் பிடிக்க வைக்கப்பட்டுள்ள 16 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.

இதனையடுத்து, சிறுத்தை நடமாட்டம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, நரசிங்கம்பேட்டை பகுதியில் இருப்பதாக நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அல்லது திருவாரூர் மாவட்டம் எல்லைப் பகுதிகள் அருகாமையில் இருப்பதால், சிறுத்தை அங்கு இடம் பெயர்ந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தையின் கால் தடம் கண்டறியப்பட்டது. அதனைப் பார்க்கும் போது நேற்று முன்தினம் பதிவானது போல தென்பட்டது.

இதனையடுத்து, மயிலாடுதுறை எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை, மல்லார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், திருவாரூர் மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் அப்பகுதிகளைச் சேர்ந்த வனத்துறையினர் எல்லைப் பகுதியில் முழுவதுமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்.. பகல் நேரங்களில் வெளியில் செல்வோருக்கு சுகாதாரத்துறையின் அறிவுரைகள்! - How To Protect Heat Stroke

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.