ETV Bharat / state

"கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை" - கே.எஸ்.அழகிரி! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 9:41 PM IST

Election Campaign At Thanjavur
Election Campaign At Thanjavur

Election Campaign At Thanjavur: மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜனநாயகத்தைச் சாகடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது எனவும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை எனப் பிரச்சார கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.

"கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை" - கே.எஸ்.அழகிரி!

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், இன்று(ஏப்.2) மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான வழக்கறிஞர் ஆர்.சுதாவை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு, வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகன பேரணியுடன் திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.

இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, "டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் என்ன தேசத் துரோகியா? தேச குற்றவாளியா? வெளிநாடுகளுக்குத் தப்பியோடி தலைமறைவாகவோ, அல்லது அண்டை நாடுகளைத் தஞ்சம் அடைபவரா என்று கேள்வி எழுப்பினார்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜனநாயகத்தைச் சாகடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சுதந்திரமான அமைப்புகளைச் சிறைப்படுத்தி, அதன் பணியாளர்களை தங்கள் பணியாளர்களாக மாற்றி வருகிறது. அது தான் மிகப்பெரிய பிரச்சனை. அதற்கு எதிராகக் கொள்கை ரீதியாக அமைந்தது தான் இந்த இந்தியா கூட்டணி.

மாறாக, மணிப்பூர் கலவரத்தை அடக்கக் கூட முயற்சிக்கவில்லை. அங்கு நேரில் சென்று ஆறுதல் வார்த்தைகள் கூடச் சொல்லப் பிரதமர் முன்வரவில்லை. ஆனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குப் பயணிக்கிறார். மணிப்பூர் செல்லவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குக் காரணமே பிரதமரின் சித்தாந்தம் தான்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இது கொள்கை ரீதியிலான கூட்டணி, வளர்ச்சிக்காகக் கூட்டணி, பிறரை அழிக்க, பழிக்க அமைக்கப்பட்ட கூட்டணியல்ல. இது போன்றதொரு கூட்டணியை எதிர்க்கட்சியால் அமைக்க முடியவில்லை.

அற்புதமான வாக்குறுதிகளைக் குறிப்பாக ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவோம் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே தெரியவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஒட்டுமொத்த ஊழலின் அடையாளம் பாஜக" - விமர்சித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.