ETV Bharat / state

ஜோதிமணியின் காரை சிறைபிடித்து அதிமுகவினர் கடும் வாக்குவாதம்! - LOK SABHA ELECTION 2024

Jothimani Car Capture: திண்டுக்கல் அருகே, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் காரை வழிமறித்த அதிமுக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Jothimani Car Capture
ஜோதிமணியின் காரை சிறைபிடித்த அதிமுகவினர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 7, 2024 at 2:03 PM IST

1 Min Read
Choose ETV Bharat
ஜோதிமணியின் காரை சிறைபிடித்த அதிமுகவினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று (சனிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், மாலை வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளம்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் பாசறை மாநிலச் செயலாளருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை, ஜோதிமணி தரக்குறைவாக பேசியதாகக் கூறி, வேடசந்தூர் அடுத்துள்ள கோவிலூர் ராமநாதபுரம் என்னும் இடத்தில், ஜோதிமணியின் காரை இளம் பெண் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் சிலர் திடீரென சிறைபிடித்தனர்.

பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அவரின் காரை நகர விடாமல் சரமாரியாக கேள்வி எழுப்பினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த வாக்குவாதமானது நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஜோதிமணி காரின் பின்னால் வந்த வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ காந்திராஜன் இறங்கி, இளம்பெண் உட்பட அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தினார். இதனையடுத்து, ஜோதிமணியின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, நாகம்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஜோதிமணி பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி புறப்படச் சென்றார். அப்போது ஜோதிமணியை அந்த பகுதி இளைஞர் ஒருவர் இடைமறித்து, “தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறினீர்களே, நான் உங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கவில்லை" எனக் கூறி வாக்குவாதம் செய்தார்.

அதேபோல், காந்திராஜன் சின்னழகு நாயக்கனூர் ஆதி திராவிடர் காலணியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது, அங்கிருந்த ஒருவர் "அந்த அம்மா எங்க, இதுவரைக்கும் அந்த அம்மா (கரூர் நாடளுமன்ற ஜோதிமணி சிட்டிங் எம்.பி) வந்திருக்காங்களா?" என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் காரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறை மீறல்.. என்டிஏ கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீது வழக்கு!