ETV Bharat / state

"மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நீட் தேர்வு ரத்து உறுதி" - கனிமொழி எம்பி! - kanimozhi mp press meet

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 11:50 AM IST

Updated : Mar 21, 2024, 12:34 PM IST

MP Kanimozhi press meet
கனிமொழி எம்பி செய்தியாளர்கள் சந்திப்பு

MP Kanimozhi byte: நிச்சயமாக மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாகும் பொழுது நீட் தமிழ்நாட்டில் இருந்து விலக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சிட்டிங் எம்பி கனிமொழிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் திமுக தேர்தல் வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கனிமொழி எம்பி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் விமான நிலைய வாயிலில் மேள,தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்.

பின்னர், தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,"தூத்துக்குடியில் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றி. தூத்துக்குடி பகுதியில் தண்ணீர் பிரச்சினையைச் சரி செய்வதற்காக 363 கிராமங்களை உள்ளடக்கிய தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று அதை நிறைவடையக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது.

அதேபோல, திருச்செந்தூர் தொகுதி சாத்தான்குளம் பகுதிகளில் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகத் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் அந்த திட்டம் நிறைவேற்றித் தரப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் தொழில் நிறுவனத்திற்கு 16,000 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற முடிவு செய்து இருக்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வு விலக்கு என்பது ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

இன்று கூட நீதிமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து திமுக வழக்காடிக் கொண்டு தான் இருக்கிறது. நிச்சயமாக மத்தியில் ஆட்சி மாற்றம் உருவாகும் பொழுது நீட் தமிழ்நாட்டிலிருந்து விலக்கப்படும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யார் வேண்டுமானாலும் குறை கூறலாம், ஆனால் தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த போது மக்களுக்கு எதுவுமே செய்யாத எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்பது வருத்தமாக உள்ளது. பாஜக-வின் அத்தனை மசோதாக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்டு பாஜக வெற்றி பெறுவதற்காக வாய்ப்பளித்த இயக்கம் தான் அதிமுக , அப்பொழுது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மார்க்கண்டேயன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: Live Updates: ஜி ஸ்கொயரில் ED ரெய்டு முதல் தங்கம் விலை ரூ.760 உயர்வு வரை தற்போதைய முக்கிய செய்திகள்!

Last Updated :Mar 21, 2024, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.