ETV Bharat / state

"பாஜகவின் தேர்தல் அறிக்கை சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது" - ஜவாஹிருல்லா விமர்சனம்! - Jawahirullah Criticized bjp

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 5:25 PM IST

Jawahirullah Criticized The Bjp Election Manifesto
Jawahirullah Criticized The Bjp Election Manifesto

M.H.Jawahirullah Criticized The Bjp Election Manifesto: பாஜகவின் தேர்தல் அறிக்கை சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது எனவும், பாஜக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது - ஜவாஹிருல்லா விமர்சனம்

கோயம்புத்தூர்: மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு அமோகமான ஆதரவு இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக, அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய பலவற்றைச் சிதறடித்துள்ளது. தமிழ்நாடு மக்கள் பாஜகவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்குத் தேர்தலில் தகுந்த பதிலடி அளிப்பார்கள் என்ற நம்பிக்கை தேர்தல் பரப்புரையின் போது நாங்கள் கண்ட காட்சிகளாக அமைந்துள்ளது.

நேற்றைய தினம் பாஜகவின் சார்பில் 'சங்கல்பத்ரா' என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனைப் படித்துப் பார்க்கும் பொழுது சங்கட பத்ராவாகத்தான் இருக்கின்றது என்று குறிப்பிடலாம். கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பாஜக கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை எல்லாம் மீட்டு 15 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு இந்தியர்களின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பாஜகவினர் கூறினர். தற்பொழுது உள்ள உள்துறை அமைச்சர் தேர்தல் நேரத்தில் பேசியதை எல்லாம் ஏன் இவ்வாறு சீரியஸாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்கிறார்.

பாஜக தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். 75 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்குக் காப்புறுதி என்று சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். ரயில் பயணக் கட்டணச் சலுகை இன்னும் வழங்கப்படவில்லை. அதனை ரத்து செய்ததும் பாஜகவினர் தான்.

ரயிலில் 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கான பயண கட்டணத்தை ரத்து செய்ததும் மோடி ஆட்சி தான். ஆனால், இங்கு இருக்கக் கூடிய மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் முதியோர்களையும், குழந்தைகளையும் மதிக்கிறது. கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை சங்கடங்களை ஏற்படுத்துகிறது. மக்களை ஏமாற்றும் தந்திரமாக உள்ளது. காங்கிரஸ் அறிக்கை நடைமுறையில் சாத்தியமாக இருக்கக் கூடியவையாக உள்ளது. காங்கிரஸ் அறிக்கை ஆக்கப்பூர்வமான அறிக்கை. பாஜக அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது.

இதுவரை நிறைவேற்றாததையே மீண்டும் பாஜக கூறி வருகிறது. கோவை, பொள்ளாச்சி வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பாஜகவினர் எப்போதும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டு பல்வேறு காரியங்களைச் செய்யக்கூடியவர்கள்.

தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும். 10 மணிக்கு மேல் மைக்கையும், லைட்டையும் உபயோகிக்கக் கூடாது. 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை செய்வது சட்ட மீறல். இதனை இந்தியா கூட்டணி செய்தால் விட்டு விடுவார்களா?" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே மாவட்டத்தில் 5 மக்களவைத் தொகுதிகள்; அல்லல்படும் திருப்பூர் மக்கள்... மறுசீரமைப்பில் மாற்றம் கொண்டுவரக் கோரிக்கை! - Tiruppur Constituency Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.