ETV Bharat / state

டெல்லிக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்ட ஜாபர் சாதிக்; முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 9:16 AM IST

Jaffer Sadiq Drug smuggling case
Jaffer Sadiq Drug smuggling case

Jaffer Sadiq Drug smuggling case: சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், ஜாபர் சாதிக்கிடம் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அதிகாரிகள், நேற்றிரவு மீண்டும் அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சென்னை: டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பின்னர், ஜாபர் சாதிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த பல்வேறு தகவல்களையும் அடிப்படையில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருச்சியை சேர்ந்த சதானந்தம் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.

அந்தவகையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தற்போது வரை 5 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை எந்தெந்த தொழிலில் முதலீடு செய்துள்ளார்கள்? யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார்கள்? யாரெல்லாம் இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளனர்? என்பன குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்திய சென்னை குடோனில் ஆய்வு மேற்கொண்ட மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்புடைய பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஜாபர் சாதிக்கிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 செல்போன்கள் உள்ளிட்டவற்றை வைத்து தற்போது விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் ஜாபர் சாதிக்கின் 7 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து, தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி, கூடுதலாக 3 நாட்கள் காவல் நீட்டிக்க வேண்டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜாபர் சாதிக் மீதான காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் இருந்து விமான மூலம் ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வந்த அதிகாரிகள் அவரை சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள என்சிபி (NCB) அலுவலகத்தில் வைத்து சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஜாபர் சாதிக்கின் தொழில்களை நிர்வகிக்கும் இம்ரான் மற்றும் கணக்காளர் செரிஃப் ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்து வந்ததாகவும், விசாரணையில் போது, இருவரும் அளித்த வாக்குமூலங்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பதிவு செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இன்றுடன் (மார்ச் 19) ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் முடிவடை உள்ளதால், நேற்றிரவு விசாரணைக்கு பின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை விமான மூலம் டெல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 27வது முறையாக நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.