ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ஆதரவு யாருக்கு? - விக்கிரமராஜா பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 5:02 PM IST

Thoothukudi
தூத்துக்குடி

Vanigar Sangam: “ஜிஎஸ்டியால் வியாபாரிகள் வணிகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளது. அனைத்து பொருட்களுக்கும் வரி கொண்டு வந்தாலும், ஒருமுறை வரியாக இருக்க வேண்டும்” என வனிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ஆதரவு யாருக்கு - விக்கிரமராஜா!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் தூத்துக்குடி மண்டல கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் டி.சோலையப்பராஜா ஆகியோர் முன்னிலையில், புதிய நிர்வாகிகளான கோவில்பட்டி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ஐ.ரவிமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார். இதில், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூ, மாநில துணை தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விக்கிரமராஜா, "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 41வது மாநில மாநாட்டை வரும் 25ஆம் தேதி மதுரையில் நடத்த உள்ளோம்.

வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு அச்சுறுத்தல்கள், அரசுத் துறை அதிகாரிகளால் கடுமையான மிரட்டல்கள் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும் மாநாடாக நடத்த உள்ளோம். ஜிஎஸ்டி வரி 2017-இல் அமல்படுத்தப்பட்டபோது, அரசுத்துறை அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அந்த சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியாது. ஆனால், அன்று கணக்கை பகிர்ந்து கொண்டவர்களுக்கு இப்போது லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டுமென கூறி நோட்டீஸ் வந்து கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சரைச் சந்திக்க உள்ளோம். மழையால் பாதிக்கப்பட்ட வணிகர்களின் கணக்கை சமர்பிக்க ஒரு மாத கால அவகாசம் கேட்டபோது, மாநில அரசால் தர முடியவில்லை. வணிக வரித்துறை மத்திய அரசை சார்ந்தது. அவர்கள் மூலமாகத்தான் வழங்க முடியும் என்பதால், மத்திய அரசிடம் கேட்டோம். அவர்கள் ஒருவார கால அவகாசம் வழங்கினர்.

எனவே, இந்த சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டால்தான் மாநிலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை சரி செய்ய முடியும். வணிகர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பித்தல் முறையை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மாநாடு மூலமாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம்.

ஆன்லைன் வர்த்தகம் 17 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆன்லைன் விற்பனைக்கு உற்பத்தியாளர்கள் தனி விலையை நிர்ணயம் செய்கின்றனர். இதனை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைன் வர்த்தகத்தில் புகுந்து கொண்டு, வணிகத்தை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

கஞ்சா விற்பனை செய்யும் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு சட்டத் திருத்தம் வேண்டும். கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பிளாஸ்டிக் பொருள் தொடர்பான சோதனையை அதிகாரிகள் பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும். சாதாரண வியாபாரிகளுக்கு ஒரு முறையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு முறையும் என கடைபிடிக்கக்கூடாது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துவது பெரிய கார்பரேட் நிறுவனங்கள்தான். ஆனால், அதிகாரிகள் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அவர்கள் சிறு வியாபாரிகளின் கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் என்ன என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட பொருள் விற்பனை செய்யக்கூடாது என்பதில் நாங்களும் உறுதியாக உள்ளோம். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எங்களிடம் கோரிக்கைகளை வாங்கி உள்ளனர். எங்களது தீர்மானம் பரிசீலிக்கப்பட்டு, யார் எங்களது தீர்மானத்தை நிறைவேற்றித் தருவோம் என்று கூறுகிறார்களோ, அவர்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆட்சிமன்றக் குழுவை கூட்டி நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என முடிவு செய்யப்படும்.

ஜிஎஸ்டியை ஆரம்பித்தது ப.சிதம்பரம் தான். அதனை பாஜக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டியில் கடுமையான மாற்றங்கள் வேண்டும். இதனால் வியாபாரிகள் வணிகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளது. அனைத்து பொருட்களுக்கும் வரி கொண்டு வந்தாலும், ஒருமுறை வரியாக இருக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு எந்தவித நிபந்தனையுமின்றி தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவில் களமிறங்கப் போவது யார்? வெளியானது உத்தேச வேட்பாளர் பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.