ETV Bharat / state

மக்கள் எச்சரித்தும் விடாப்புடி.. பள்ளத்தில் பேருந்தை சிக்க வைத்த ஓட்டுநர் சஸ்பெண்ட்! வீடியோ வைரல்! - tirunelveli Govt Bus Stuck Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 12:53 PM IST

Tirunelveli Govt Bus Stuck Issue: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தேங்கி நின்ற மழைநீரில் பேருந்தை சிக்க வைத்த அரசு பேருந்து ஓட்டுநர் சசிகுமாரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தண்ணீருக்குள் சிக்கிய பேருந்து
பேருந்து ஓட்டுநருக்கு பொதுமக்கள் எச்சரிக்கை கொடுப்பதை படத்தில் காணலாம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மக்கள் எச்சரித்தும் விடாப்புடி.. பள்ளத்தில் பேருந்தை சிக்க வைத்த ஓட்டுநர் சஸ்பெண்ட் (ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வள்ளியூர் ராதாபுரம் பகுதிகளில் நேற்று (மே.15) பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் நான்கு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சுமார் 65 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து, வள்ளியூர் அடுத்த ரயில்வே தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் சிலர், இந்த வழியாக செல்ல வேண்டாம். நான்கு அடிக்கு தண்ணீர் கிடக்கிறது, போக வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், அதை கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் ஓட்டுநர், அலட்சியத்தோடு பாலத்தை கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பாலத்தில் சூழ்ந்திருந்த தண்ணீருக்குள் பேருந்து சிக்கிக் கொண்டது. நான்கு அடி தண்ணீரில் பேருந்து சிக்கிக் கொண்டதால், பேருந்துக்குள் தண்ணீர் நுழைந்து பேருந்து பழுதாகி நின்றது. இதன் காரணமாக பேருந்தில் இருந்த சுமார் 65 பயணிகள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வள்ளியூர் தீயணைப்புத் துறையினர், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் அவசர கதவு வழியாக பத்திரமாக மீட்டனர். அதன் பின், மீட்கப்பட்டவர்கள் மாற்று பேருந்து மூலம் திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் மக்கள் எச்சரித்தும் ஓட்டுநர் பேருந்தை இயக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

அதன் அடிப்படையில், போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் அந்த பேருந்தை ஓட்டியது நாகர்கோவில் மாவட்டம் குளச்சல் பணிமனையை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அலட்சியத்தோடு பணிபுரிந்ததாகக் கூறி, ஓட்டுநர் சசிகுமாரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிங்க: திடீரென ஓடும் அரசுப் பேருந்திலிருந்து கழண்டு ஓடிய சக்கரம்.. சீர்காழியில் நடந்தது என்ன? - Wheel Came Off From Moving Govt Bus

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.