ETV Bharat / state

வாக்களிக்கும் மையத்திற்கு இலவச போக்குவரத்து சேவை.. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு! - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 5:54 PM IST

TamilNadu Election 2024
TamilNadu Election 2024

TamilNadu Election 2024: நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்வதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் “இந்தியத் தேர்தல் ஆணையம், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுப் போக்குவரத்து வசதி இல்லையெனில், அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யலாம் எனவும், தகுதியுள்ள வாக்காளர்களுக்கு இந்த வசதிகளைப் பெறுவதற்கு சக்ஷம் செயலி அல்லது உதவி எண்ணில் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படலாம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று, சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும், வாக்குப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லத்திலிருந்து வாக்குச் சாவடிக்கும், வாக்குச்சாவடியிலிருந்து இல்லத்திற்கும் இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட வசதிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் “சக்ஷம் கைபேசி செயலி” (Saksham App) அல்லது 1950 என்ற உதவி எண்ணை அழைத்து மாவட்டக் கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கையை முன்வைத்து, வாக்களிக்க ஏதுவாக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “கடைசி வாக்காளர் வரை வாக்களிக்க நடவடிக்கை” - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.