ETV Bharat / state

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! - Disproportionate assets case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 9:24 PM IST

Etv Bharat
Etv Bharat

Trichy former Registrar case: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (79). இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் பணிபுரிந்த (1989 - 1993) காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்தபோது, அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி வசந்தி (65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு 32 லட்சத்து 25 ஆயிரத்து 532 ரூபாய் என கூறப்பட்டது.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன் பேரில், கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று, அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் காவல் ஆய்வாளர் அம்பிகாபதி, வழக்கு தொடுக்கப்பட்டு புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர்களால் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கில், விசாரணை முடிவுற்று இன்று (ஏப்.25) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

மேலும், சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேலாகும் என தெரிய வருகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஜூன் 7-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு! - Thoothukudi Firing Incident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.