ETV Bharat / state

திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்து வாக்களித்த முதல் பெண்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 5:04 PM IST

Etv Bharat
Etv Bharat

Lok Sabha Election 2024: திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அன்னை ஆசிரமம் எம்எம் நடுநிலைப்பள்ளியில் அவர் தனது முதல் வாக்கினைச் செலுத்தினார்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்து வாக்களித்த முதல் பெண்

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நளினி என்ற பெண்ணுக்கு, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிக்க வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி நளினி கூறியதாவது, “மாவட்ட நிர்வாகத்தால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள்.

அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் தான் உள்ளனர். எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கான பிறப்புச் சான்றிதழில் இந்தியத் தமிழர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இலங்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில், இந்தியர் என்பதற்காக எக்ஸ் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதனால் அங்கு வாக்குரிமை இல்லாத நிலையில், இங்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் அந்த உரிமை இல்லாமல் முடங்கி கிடந்தோம். அதில் எனக்கு மட்டும் வாக்குரிமை கிடைத்துள்ளது. முகாமில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கிறோம். மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் எதிர்பார்ப்பை கவனத்தில் கொண்டு குடியுரிமை வழங்க வேண்டும்.

தற்போது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால், முதல் முறையாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் எனக்கு வாக்குரிமை கிடைத்துள்ளது. இதை என்னைச் சார்ந்த மக்களுக்கான உரிமையாக கருதுகிறேன். எனது தாத்தா, பாட்டி இந்தியாவில் பிறந்தவர்கள். எனது அப்பா, அம்மா இந்திய வம்சாவளியினர். நான் ராமநாதபுரத்தில் தான் பிறந்தேன்.

இதன் அடிப்படையில், நான் இந்திய பிரஜை என்பதற்கான ஆவணங்கள் வேண்டும் என நீதிமன்றத்தை நாடி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விண்ணப்பித்து போராடினேன். இறுதியாக, எனக்கு இந்திய குடியுரிமைக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போராடி வாக்குரிமையைப் பெற்றேன்” என்றார்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அன்னை ஆசிரமம் எம்எம் நடுநிலைப்பள்ளியில் நளினி தனது முதல் வாக்குப்பதிவினைச் செலுத்தினார். என்னைப் போல் குடியுரிமைக்காகவும், வாக்குரிமைக்காகவும் ஏராளமானோர் முகாமில் காத்திருப்பதாகத் தெரிவித்த நளினி, அவர்களுக்கும் இந்திய வம்சாவளியினர் என குடியுரிமை, வாக்குரிமை கிடைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக திருச்சி மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்த பொழுது, “நளினி அகதிகள் முகாமில் உள்ளார். ஆனால், அவர் அகதி இல்லை. இந்திய பிரஜை, இந்திய குடியுரிமை பெற்றவர். மற்றவர்கள் அகதிகள் என்பதால், அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. இவர் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளதால், இவர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்களிக்க வந்து ஏமாற்றமடைந்த தேனி வாக்காளர்கள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனச் சாலை மறியல்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.