ETV Bharat / state

வாக்களிக்க வந்து ஏமாற்றமடைந்த தேனி வாக்காளர்கள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனச் சாலை மறியல்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 3:20 PM IST

Theni Voter List Issue
வாக்காளர் பட்டியல்

Theni Voter List Issue: தேனி மாவட்டத்தில் உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்கு செலுத்த வந்த மக்கள் ஏமாற்றமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில், சுமார் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களில் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், உப்புக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த உப்புக்கோட்டை ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளர்களாக உள்ளனர். உப்புக்கோட்டை கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 133 மற்றும் 136 ஆகிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை முதலே பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்டோர், வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த வந்தனர். அப்போது, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததாகக் கூறி, அவர்களுக்கு வாக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு, தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

ஒரே குடும்பத்தில் நான்கு பேர் உள்ள நிலையில், அவர்களின் இரண்டு பேருக்கும் மட்டும் வாக்குகள் இருப்பதாகவும், மீதமுள்ள இரண்டு பேருக்கு வாக்குகள் இல்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், உப்புக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஏழாவது வார்டு கவுன்சிலராக இருக்கும் பாண்டீஸ்வரி என்பவருக்கும் வாக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல், இறந்தவர்களின் வாக்குகள் நீக்கப்படாமல் அவர்களுக்கு வாக்குகள் இருப்பதாகவும், தங்களுக்கு வாக்குகள் இல்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், கடந்த முறை தேர்தலில் தாங்கள் அனைவரும் வாக்களித்த நிலையில், இம்முறை தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை எனக் கூறுவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் வாக்கு செலுத்தும் வரை, வாக்குச்சாவடியை விட்டுச் செல்ல மாட்டோம் எனக் கூறி வாக்குச்சாவடி முன்பாக நின்று வாக்குவாதம் செய்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போடி வட்டாட்சியர் மணிமாறன், உப்புக்கோட்டை கிராமத்தில் வாக்குகள் இல்லாத பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தற்போது வாக்கு இல்லாத மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் எப்படி இருக்கு? ஆன்லைனில் அறியலாம்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.