ETV Bharat / state

சென்னையில் பணியாற்றும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் துவக்கம்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 2:28 PM IST

Etv Bharat
Etv Bharat

Lok Sabha Election 2024: சென்னையில் பணிபுரியும் காவலர்கள், இன்று முதல் நாளை மறுதினம் வரை தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகரக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னையில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, காவலர்கள் இன்று முதல் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் தபால் வாக்கு செலுத்த சிறப்பு தபால் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், காவலர்கள் வியாழன், வெள்ளி மற்றும் சனி (ஏப். 11, 12, 13) ஆகிய நாட்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம்.

வடசென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காவலர்கள் வண்ணாரப்பேட்டை, பேசின் பாலம் சாலையில் உள்ள வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வாக்குகளைச் செலுத்தலாம்.

மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காவலர்கள் செனாய் நகர், புல்லா அவென்யூ, 2-வது குறுக்குத்தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன், காவல் துறையினர் வாக்கு செலுத்தும் மையங்களுக்கு நேரடியாகச் சென்று, ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தபால் வாக்கு செலுத்தும் காவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சேலம் மாவட்ட போலீசார் தபால் வாக்குப்பதிவு.. தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி நேரில் ஆய்வு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.