ETV Bharat / state

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: அரசு உடனடியாக நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்! - Yercaud Bus Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 12:52 PM IST

Updated : May 1, 2024, 12:59 PM IST

Yercaud Bus Accident
Yercaud Bus Accident

Yercaud Bus Accident: ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணம் வழங்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: ஏற்காட்டில் இருந்து நேற்று (ஏப்.30) சேலம் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 13ஆவது கொண்டை ஊசி வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆறுதல் தெரிவித்தும் மற்றும் அரசு சார்பாக விரைந்து உரிய நிவாரணமும், உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும் வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பாதையில் 30.4.2024 அன்று மாலை, ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அதிமுகவினர் ஆறுதல்
காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அதிமுகவினர் ஆறுதல்

தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் மேலும் இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விபத்தினால் ஏற்காடு மலைப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாடு முழுவதிலும் இருந்து கோடை வெயிலை சமாளிக்க, மக்கள் மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.

எனவே, அரசு உடனடியாக உரிய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தி, அனைத்து சுற்றுலா தளங்களிலும் செக்போஸ்ட் அமைத்து, பேருந்து மற்றும் இதர வாகன ஓட்டுநர்களை பரிசோதனை செய்யவும், பொது போக்குவரத்து ஓட்டுநர்கள் மலைப் பகுதியில் ஓட்டி பழக்கமானவர்களா என்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிடவும், பலத்த காயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும், அரசின் சார்பில் நிதியுதவி வழங்கிடவும் மற்றும் உயர் மருத்துவ சிகிச்சை அளித்திடவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முன்னதாக, ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 5 பேர் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதையும் படிங்க: ஏற்காடு பேருந்து விபத்து: 5 பேர் பலி.. வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விடுத்த எச்சரிக்கை! - Yercaud Bus Accident

Last Updated :May 1, 2024, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.