ETV Bharat / state

'திமுகவால் மத்தியில் ஆட்சி மாற்றம்..நரேந்திர மோடி சிறைக்கு செல்வது உறுதி' - ஆ.ராசா பரபரப்பு பேச்சு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 10:04 AM IST

DMK MP A.Raja talks about PM Modi at DMK general meeting in Coimbatore
கோயம்புத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மோடி குறித்து எம்.பி ஆ.ராசா பேச்சு

A.Raja MP: தேர்தல் நேரத்தில் அதானி உட்பட பலர் ரூ.6 ஆயிரத்து 500 கோடி மோடிக்கு ரகசியமாய் கொடுத்துள்ளதாகவும், மத்தியில் திமுகவால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, பிரதமர் மோடி கண்டிப்பாக சிறைக்குச் செல்வார் என்றும் எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, "திராவிட மாடல் அரசின் எல்லோருக்கும் எல்லாம்" என்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச்.3) கோவை தேர்முட்டி திடலில் நடைபெற்றது. கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்த இக்கூட்டத்தில், திமுக துணைப்பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், 'திமுக தோன்றிய நாள், திமுகவிற்கு சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை வழங்கிய தந்தை பெரியார் பிறந்த நாள். இந்த இயக்கத்தை கட்டமைத்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் ஆகிய மூன்று நாட்களும், செப்டம்பர் மாதத்தில்தான் வருகின்றன.

அந்த வகையில், மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை, இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடுவோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, மிகவும் இறுக்கமாகவும், தயக்கமாகவும் இருந்தார். ஏனெனில், அவர் பொறுப்பேற்றபோது கரோனா உச்சகட்டத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் ஒலித்தது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களைப் புதைக்க இடமில்லை. மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க படுக்கையில்லை.

இந்த சூழ்நிலையில்தான், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது நிதியமைச்சரை அழைத்து ஆலோசிக்கையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு சென்றிருந்தது தெரியவந்தது.

கரோனா மற்றும் ரூ.5 லட்சம் கோடி கடன் போன்றவைகள் இருந்தாலும், ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் தனது குடும்பத்தை கவனிக்க முடியாமல் பாதிப்படைந்த அனைவருக்கும் ரூ.4 உதவித்தொகை வழங்குவோம் என முதலமைச்சர் கூறினார். அதை செய்தும் காட்டினார். இதுதான் ஒரு தலைவனுக்குரிய பண்பாகும்' என்று புகழாரம் சூடினார்.

மேலும் பேசிய அவர், 'இதுவரை பிரதமர் மோடி கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. இந்த சம்பவம் காரணமாக நாடாளுமன்றத்திலே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங், 'அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எங்கள் மாநிலத்தில் நடப்பதுதான்' என்று கூறினார். இந்த மக்கள் மன்றத்தில் நான் கேட்கிறேன், இந்த சம்பவம் நடந்த பின்பும் பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்தாரா? அவர் ஒரு காண்டாமிருகம்.

அவரை ஆதரிக்கும் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு என்ன பெயர் வைக்கலாம்? என்பதை கோவை மக்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள். நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒருமணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பதை பிரதமர் இந்த கேள்வி நேரம் மூலமாக நன்கு தெரிந்துகொள்ள முடியும். ஆனால், இதுவரை கேள்வி நேரத்திற்கு பிரதமர் மோடி வந்தது இல்லை.

நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், பிரதமர் மோடி மற்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருப்பார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை, நான் இதுவரை கண்டதில்லை. தேர்தல் நேரத்தில் அதானி உட்பட பலர் ரூ.6 ஆயிரத்து 500 கோடி மோடிக்கு ரகசியமாய் கொடுத்துள்ளனர். அப்படி ரகசியமாய் பணம் வாங்குவதற்கு என்ன அவசியம்?' என்று கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய ஆ.ராசா எம்பி, 'இதுவரை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அவருக்கு அருகதை உள்ளதா? என் மீது சாட்டப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் நேர்மையாக பதில் அளித்து, அந்த வழக்கில் இருந்து வெளிவந்த என்னைப்போல், நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை எதிர்கொள்கின்ற வலிமை மற்றும் யோகிதை மோடிக்கு இருக்கின்றதா? பிரதமர் மோடி கூறுகிறார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக இருக்காது என்று.

நான் கூறுகிறேன், 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று தற்போதுள்ள மத்திய அரசை மாற்றினால், கண்டிப்பாக பிரதமர் மோடி சிறைக்குச் செல்வார். பெரியார், அண்ணா, கலைஞர் தமிழை வளர்த்தனர்; தமிழ்நாட்டை வளர்த்தனர். இவற்றைத் தாண்டி திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவை வளர்க்க மோடியிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முயற்சி எடுத்து வருகின்றார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் வடிவேலு மரியாதை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.