ETV Bharat / state

திருப்பத்தூரின் இருவேறு இடங்களில் விபத்து.. 25க்கும் மேற்பட்டோர் காயம்! - Tirupathur accidents today

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 11:50 AM IST

Etv Bharat
Etv Bharat

Tirupathur district accidents: தருமபுரி மேம்பாலத்தின் கீழ் தனியார் பேருந்து மற்றும் ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல், வேலூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, சாலையை சமன் செய்து கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர்: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் அவருடைய மகன் சபரி ஆகியோர், காஞ்சிபுரத்துக்கு வைக்கோல் ஏற்ற ஈச்சர் லாரியில் தருமபுரியில் இருந்து வந்துள்ளார். அதேநேரம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 8 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று சுமார் 15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தருமபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது.

இந்த நிலையில், தருமபுரி மேம்பாலத்தின் கீழ், திடீரென ஈச்சர் லாரியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சபரி, தேவராஜ், கணேசன், ஜமுனா, நாகராஜ், நவாப், சாகித், சக்கரை, பவானி, தாமோதரன் மற்றும் வள்ளி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும், ஈச்சர் லாரியில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கான சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதற்காக சாலையோரம் மண் சமன் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக வேலூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, சாலையை சமன் செய்து கொண்டிருந்த (ஐ - பிரீட்) வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் படிங்க: பெற்ற மகளின் தலையை வெட்டிக் கொன்ற தந்தை.. நெல்லையில் பரபரப்பு! - Father Killed His Daughter

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.