ETV Bharat / state

மோடிக்கு செங்கோல் கொடுத்த ஆதீனத்திற்கு மிரட்டல் - பாஜக மாவட்டத்தலைவர் தலைமறைவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 12:39 PM IST

Updated : Mar 1, 2024, 1:50 PM IST

பிரதமர் மோடியுடன் தருமபுர ஆதினம்
பிரதமர் மோடியுடன் தருமபுர ஆதினம்

Dharmapuram Adheenam: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் குறித்து அவதூறு வீடியோ வெளியிடுவதாகக் கூறி பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானமாக உள்ளவர், தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கியதன் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்ட ஆதீனமாக புகழ்பெற்றார். 2023ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் போது, தமிழ்நாட்டிலிருந்து ஆதீனங்கள் சென்று பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கினர். அந்த குழுவில் தருமபுரம் ஆதீனமும் இடம்பெற்றிருந்தார். தேவார பாசுரங்கள் பாடி பிரதமர் மோடிக்கு செங்கோலை வழங்கினார்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி பிப்ரவரி.25ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவர், தன்னிடம் தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாகவும், 40 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால், சமூக வலைத்தளங்களிலும், டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவதாகவும்" மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பணத்தைப் பெறுவதற்காக திருவெண்காடு சம்பக்கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவரை வைத்து பேரம் பேசியதாகவும். போலீசாரிடம் புகார் அளித்தால், ரவுடிகள் மூலம் மடத்தைச் சார்ந்தவர்களை கொலை செய்யக்கூட தயங்கமாட்டோம் என்று மிரட்டியதாகவும் வினோத் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், செம்பனார்கோவிலைச் சேர்ந்த குடியரசு, ஜெயச்சந்திரன், மற்றும் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தொழிலதிபர் குடியரசு, ஆடுதுறை வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

இதனிடையே திமுக பிரமுகரான திருக்கடையூர் விஜயகுமார் மற்றும் தருமபுரம் மடத்தின் பணியாளர் செந்தில் ஆகியோரின் பெயர்களும் புகாரில் இடம் பெற்றிருந்தநிலையில், இது தவறுதலாக நடந்து விட்டது எனவும். மேற்கண்ட இருவரும் தங்களுக்கு உதவி செய்தவர்களே எனவும் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வலிப்பு வந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தாமதம் என புகார்.. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்!

Last Updated :Mar 1, 2024, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.