ETV Bharat / state

“எங்க அப்பா இறந்துட்டாங்க..” - மகளின் நாடகம் வெளிவந்தது எப்படி? - Daughter killed father

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 6:32 PM IST

தந்தையை கொன்ற மகள்
Daughter killed father (கன்னியாகுமரி செய்தியாளர் எட்வின்)

Daughter killed father: ஆண் நண்பருடன் இணைந்து தந்தையைக் கொலை செய்து நாடகமாடிய மகளை பூதப்பாண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி: ஆண் நண்பருடன் இணைந்து தந்தையைக் கொலை செய்து விட்டு மதுபோதையில் இறந்துவிட்டதாக நாடகமாடிய மகளை, ஆண் நண்பருடன் பூதப்பாண்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பூதப்பாண்டி அருகே கடுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில், அவருடைய இரண்டாவது மகள் தாயுடனும், முதல் மகள் ஆர்த்தி (21) தந்தையுடனும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது தந்தை இறந்து விட்டதாக ஆர்த்தி, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடைப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த சுரேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, சுரேஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், இயற்கைக்கு மாறாக சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் அவரது மகள் ஆர்த்தியிடம் தனிப்படை போலீசார் விசாரனை நடத்தி உள்ளனர். விசாரணையில், ஆர்த்தி தாக்கியதில் அவரது தந்தை இறந்தது தெரிய வந்துள்ளது.

இதனால், சந்தேக மரணம் என்று பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த பூதப்பாண்டி போலீசார் ஆர்த்தியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேஷ் பாபு (40) என்பவர் ஆர்த்தியுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது.

இதனால் மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தந்தை, இது குறித்து மகளைக் கண்டித்து வந்துள்ளார். மேலும், சுரேஷ்பாபுவுடன் பழகுவதை நிறுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி, அவரது ஆண் நண்பரான சுரேஷ்பாபுவுடன் இணைந்து தந்தையைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, சுரேஷ் குமாரின் பலவீனமான மது பழக்கத்தை பயன்படுத்தி, அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து சுயநினைவு இழந்த நிலையில், இருவரும் இணைந்து சுரேஷ்குமாரை கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து, தந்தை இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து நாடகமாடியுள்ளார். ஆனால், பிரேதப் பரிசோதனையில் இவர்களது நாடகம் அம்பலமாகி உள்ளது. இதனால், தந்தையைக் கொலை செய்த மகள் ஆர்த்தி மற்றும் அவரது ஆண் நண்பர் சுரேஷ்பாபுவை பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:பெண் குரலில் பேசி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது! - Sexually Harassed A Woman Police

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.