ETV Bharat / state

பவானி ஆற்றில் காசுக்காக கொலை..? இயக்குநர் பாக்கியராஜின் கருத்துக்கு கோவை போலீசாரின் பதில் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 7:12 AM IST

பவானி ஆற்றில் கொலை நடத்துவதாக பாக்கியராஜின் கருத்தை காவல்துறை மறுத்துள்ளது
பவானி ஆற்றில் கொலை நடத்துவதாக பாக்கியராஜின் கருத்தை காவல்துறை மறுத்துள்ளது

Actor Bhagyaraj: பவானி ஆற்றில் குளிக்க வரும் நபர்கள் மூழ்கடித்து கொல்லப்படுவதாக நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அதை மறுத்து கோவை போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வனப்பகுதியில் உள்ள பத்தரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றில் குளிக்க வரும் நபர்களை, சிலர் ஆற்றில் மூழ்கடிக்கச் செய்து கொலை செய்வதாகவும், பின்பு அவர்களது உடலை மீட்க பணம் பேரம் பேசி அதை ஒரு தொழிலாகவே சிலர் செய்து வருவதாகவும் இயக்குநர் பாக்யராஜ் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஓன்றை பதிவிட்டு இருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இயக்குநர் பாக்கியராஜின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் கோவை மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்று நேற்று (பிப். 13) வெளியிட்டது. அதில் பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தப்படுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றது எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், "இதுவரை பவானி ஆற்றுப் பகுதியில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை. பவானி ஆறு, மேட்டுப்பாளையம், காரமடை, மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது.

இதையும் படிங்க: கோவை மக்களின் குடிநீர் பிரச்னைக்கான தீர்வு என்ன? - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு பதில்!

கடந்த 2022ஆம் ஆண்டில், பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள்ளனர். அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, லைஃப் கார்ட்ஸ் குழுவினர் பவானி ஆற்றங்கரையில் ரோந்து சென்று, நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கின்றனர். இந்த பிரிவின் முயற்சி காரணமாக, பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 6ஆக குறைந்துள்ளது.

மேலும், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் பதிவாகிய அனைத்து வழக்குகளையும் முறையாக விசாரணை செய்து அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே இறப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள், அவை ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை" என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இரண்டொரு மாதங்களில் ஸ்ரீபெரும்புதூர் பாலம் பணிகள்.. செல்வப்பெருந்தகை கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.