ETV Bharat / state

"கட்சியினருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - கோவை ஆட்சியர் எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 3:10 PM IST

Coimbatore district collector Kranthi Kumar Pati: அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிராந்தி குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Coimbatore district collector Kranthi Kumar Pati
Coimbatore district collector Kranthi Kumar Pati

கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்தை அடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்தி குமார், "கோவை மாவட்டத்தில் 30 லட்சத்து 81 ஆயிரத்து 594 வாக்காளர்கள் இருக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் முடியும் 10 நாட்களுக்கு முன்பு வரை (மார்ச் 17) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

மேலும், 85 வயதுக்கு மேல் இருப்பவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 31 ஆயிரத்து 835 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்களும், 14 ஆயிரத்து 285 மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். மேலும், தேர்தல் குறித்த புகார்கள் தெரிவிக்க தனி எண் வழங்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சி சின்னங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, 50 ஆயிரத்துக்கு மேல் பணம் வைத்து இருப்பவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும். அப்படி பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அச்சப்பட தேவையில்லை, உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்கப்படும். பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். வீடியோ டீம் மூலம் அனைத்து பகுதிகளிலும் வீடியோ எடுக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்தாலும், பிரதமருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் விதிவிலக்குகள் இருக்கின்றது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றாலும், வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்புதான் செலவு கணக்கு வேட்பாளர் மீது வரும். வேட்பாளர் அறிவிக்கும் வரை, நடக்கும் செலவுகள் கட்சியின் கணக்கில் இருக்கும்.

பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பரிசுப் பொருட்கள், டோக்கன் வழங்குவது குறித்த செயல்கள் மீது புகார்கள் அடிப்படையில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகள் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றோம். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், காவல்துறை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருபவர்கள் மீது எப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முடியும் வரை, காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தேர்தல் நாளன்று 3 ஆயிரம் போலீசார் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் பணி! விழுப்புரத்தில் சோதனையில் களமிறங்கிய பறக்கும் படை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.