ETV Bharat / state

நீதிபதியாகும் முதல் பழங்குடி பெண்; குவியும் பாராட்டுகள்; முதல்வர் வாழ்த்து..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 4:37 PM IST

ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி
ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி

Tribal Woman Become a Civil Judge: ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் பழங்குடியின பெண் நீதிபதி ஆகவுள்ளார். இவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி (வயது 23). இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று பின்னர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ளார். படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்குத் திருமணமான நிலையில், படிப்பை விடாமல் தொடர்ந்து படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்குத் தயாராகி வந்த ஸ்ரீபதிக்கு பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். நல்வாய்ப்பாகத் தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி, தனது கணவர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2வது நாளில் காரில் சென்னைக்குப் பயணம் செய்து, சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். 23 வயதில் சிவில் நீதிபதியாகத் தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் ஸ்ரீபதிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்! பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அதுவும் நமது அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்! சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா விவாதம்; நீட் விலக்கு குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்பி வில்சன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.