ETV Bharat / state

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்! - Samayapuram Mariamman Temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 4:01 PM IST

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரவாரம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா கோலாகலம்

Chithirai therottam at Trichy: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா கோலாகலம்

திருச்சி: அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதான, திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா இன்று (ஏப்.16) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் உலக நன்மைக்காகவும், பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், குடும்பம் செழிக்கவும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பூச்சொரிதல் விழா நடைபெறும்.

இந்த விழாக்காலங்களில் மரபு மாறி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதனால் இக்கோயிலுக்குத் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து ம் தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஏப்.07 ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்கியது. அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி, கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் உள் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும், அஸ்திர தேவர்களுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர்.

சித்திரை தேரோட்ட விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். இரவில் தினமும் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

நேற்று இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா, இன்று (ஏப்.16) நடைபெற்றது. காலை 10.31 மணிக்குள் மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்ட விழாவைக் காண வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரப்பட்டது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், தேர்த் திருவிழாவைக் காண வந்த பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 18 டிஎஸ்பி, 25 காவல் ஆய்வாளர்கள், 60 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1250 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விசில் பறந்த கம்பம் ஆடும் விழா..தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா..பெண்களை வியக்க வைத்த இளைஞர்களின் நடனம் - Kambam Attam Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.