ETV Bharat / state

மதுரையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் கொலை; 10 பவுன் நகை, செல்போன் கொள்ளை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 8:53 PM IST

மதுரையில் பார்வையற்ற பெண் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை
மதுரையில் பார்வையற்ற பெண் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை

Blind Woman Murder: உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்து 10 பவுன் மதிப்பிலான நகைகள், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கவிதா (50) டேனியல் ஆறுமுகம் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அரசுப் பள்ளி இசை ஆசிரியரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

மாற்றுத்திறனாளி கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகேயுள்ள அன்னை சத்யா நகர் பார்வையற்றோர் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக கவிதாவின் கணவர் டேனியல் வீட்டில் தவறி விழுந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், கவிதாவின் மகள் உசிலம்பட்டி பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவர் அதே பள்ளி விடுதியில் தங்கி வருவதால் கவிதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணான கவிதா அருகில் உள்ளவர்களின் உதவியோடு தனது சொந்த வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அருகில் உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருந்த கவிதா இரவு சாப்பிட்டு விட்டுத் தூங்கியுள்ளார்.

இதனையடுத்து, இன்று (மார்ச்.12) மதியம் வரை கவிதா வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், அருகில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி கவிதா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சிலைமான் காவல்துறையினர், மோப்பநாய் உதவியுடன், கைரேகை நிபுணர்கள் கைரேகைகளைச் சேகரித்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கவிதா அணிந்திருந்த 10 பவுன் மதிப்பிலான செயின், மோதிரம், கம்மல் மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி கவிதாவை நகைக்காகக் கொலை செய்தார்களா, வேறு ஏதேனும் காரணமா என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அன்னை சத்யா நகர்ப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவிதாவின் மகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் நிலையில், தனது தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து, உடலைப் பார்க்க வந்த போது கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தந்தையை இழந்து தாயுடன் வசித்து வந்த மாணவி, தற்போது தாயையும் இழந்து தவித்து வருகிறார். மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கவிதாவின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர், வந்து தப்பியோடியது தொடர்பாக கவிதாவின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் இதுபோன்று வீட்டிற்குள் புகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு பரிசு வழங்கியதில் முறைகேடு என வழக்கு; மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.