ETV Bharat / state

காந்தியை இழிவுப்படுத்தினாரா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திருவாரூரில் கருப்புக் கொடி போராட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 8:15 AM IST

காந்தியை இழிவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்
காந்தியை இழிவுப்படுத்தியதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் மற்றும் மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திருவாரூரில் கருப்புக் கொடி போராட்டம்

திருவாரூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்தியை இழிவுப்படுத்தி மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் 'மக்கள் விரோத ஆர்எஸ்எஸ் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு' என்று திருவாரூருக்கு வருகை தரும் ஆளுநரை விரட்டியடிக்க கருப்பு கொடிகளோடு வருக என்றும், மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள், திருவாரூர் மாவட்டம் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

குறிப்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து கருப்பு கொடிகளோடு வருக என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

பின்னர், கருப்பு கொடிகளுடன் ஊர்வலமாக வந்த விசிக உள்ளிட்ட பல அரசியல் இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து நிறுத்தியதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தடுத்ததால் சாலையில் அமர்ந்து ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டினம் எம்.பி., செல்வராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ், "சொந்த மக்கள் ஆள வேண்டும், இந்திய நாட்டை அடிமைப்படுத்திய அன்னியர்கள் வெளியேற வேண்டும் என்று மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை வழி போராட்டமும், ஆயுதம் தாங்கிய போராட்டம் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலும் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மகாத்மா காந்திக்கு சுதந்திரத்தில் எந்த பங்கும் இல்லை என்ற சரித்திரத்தை புரிந்து கொள்ளாத அபத்தமான கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆளுநராக இருப்பதற்கே அவருக்கு தகுதி இல்லை. ஆளுநர் பதவியை தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளவும், மாநில அரசுகளை அச்சுறுத்துவதற்காக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. அத்தகைய ஆளுநர்களில் முதன்மையானவராக ஆர்.என்.ரவி திகழ்கிறார். எனவே, ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

டெல்டா மண்ணில் வர்க்கப் போராட்டத்தை நடத்திய விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ள இந்த பகுதியில் ஆளுநர் தன்னுடைய அரசியலை செய்ய முற்படுகிறார். அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்" - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.