ETV Bharat / state

“வீடு கட்டாமல் இருந்ததற்கு தமிழக அரசே காரணம்”.. அண்ணாமலை குற்றச்சாட்டும், உதயநிதியின் எய்ம்ஸ் பதிவும்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 8:15 PM IST

annamalai-and-udhayanidhi-stalin-on-house-allotment-to-madurai-chinnapillai
சின்னப்பிள்ளைக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு; உதயநிதி மற்றும் அண்ணாமலை சமூக வலைத்தள கருத்துகள் கூறுவது என்ன?

Annamalai Vs Udhayanidhi Stalin: மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு கட்ட இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசு மீதும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில அரசு மீதும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை: மதுரை மாவட்டம், அழகர்கோவில் செல்லும் சாலையில், அப்பன்திருப்பதிக்கு அருகே அமைந்துள்ளது, பில்லுசேரி எனும் சிறிய கிராமம். இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்து தலைவியாகச் செயல்பட்டு, களஞ்சியம் சுயஉதவிக் குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர், பெ.சின்னப்பிள்ளை.

இதன் காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரியில், அன்றைய பிரதமர் வாஜ்பாயி கையால் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் எனும் விருதைப் பெற்றதுடன், வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதனையடுத்து, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருதும், 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி கையால் ஔவையார் விருதும், 2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

இந்நிலையில், சின்னப்பிள்ளைக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும், இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என்றும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சின்னப்பிள்ளை நேர்காணல் மூலம் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது X வலைத்தளப் பதிவில், “பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன். கவலை வேண்டாம், ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்கு புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்" என தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைத்தளப் பதிவில், "இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, கருணாநிதி தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது. மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை.

2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார். இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 'மகளிர் மேம்பாடு' எனும் கருணாநிதியின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்" என தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது X வலைத்தளப் பதிவில், "மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து, மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூட தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது வேதனைக்குரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மாக்கு, வீடு கட்ட நிதியும், இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்ய கிளம்பியிருக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின். அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அது குறித்து பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்த தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா. இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்" என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.