ETV Bharat / state

"பாரத ரத்னா விருதுக்கு தகுதியான ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்" - சரஸ்வதி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அன்புமணி பேச்சு! - PMK President Anbumani Ramadoss

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 3:04 PM IST

PMK President Anbumani Ramadoss
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

PMK President Anbumani Ramadoss: தமிழகத்தில் விழுப்புரம் கல்வியில் மிகவும் பின் தங்கி, டாஸ்மாக்கில் முதலிடத்தில் உள்ளது என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியின் 11 மற்றும் 12ஆம் பட்டமளிப்பு விழா மார்ச் 22 வெள்ளிக்கிழமை காலை 10:20 மணியளவில், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழுத்தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் மா.வீரமுத்து வரவேற்புரை வழங்கினார். விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஐசரி கணேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில், 2018 - 2021ஆம் கல்வியாண்டில் பயின்ற 293 மாணவ, மாணவியர்கள் மற்றும் 2019 - 2022ஆம் கல்வியாண்டில் பயின்ற 242 மாணவ, மாணவியர்களும் சேர்த்து, 510 இளங்கலை பட்டமும், 25 முதுகலை பட்டமும் என மொத்தம் 535 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில், 339 ஆண்களும் மற்றும் 196 பெண்களும் பட்டங்களைப் பெற்றனர்.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

விழா மேடையில் பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ், "பட்டம் பெறக்கூடிய மாணவர்கள் நாளைய உலகின் தூண்கள். ஆகையால், மாணவர்கள் மேலும் பல பட்டங்களைப் பெற்று, நாட்டை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். புகை, மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாமல், ஐயா(மருத்துவர் ராமதாஸ்) வழியில் செயல்பட வேண்டும்.

மருத்துவர் ராமதாஸ் பாரத ரத்னா விருது பெற தகுதி படைத்த ஒரே தலைவர் ஆவார். அவர் வழியில் மாணவர்களாகிய அனைவரும் செயல்பட வேண்டும். ஒரு காலத்தில் இவ்விடம், கருவேல மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. எனது தாயார், இந்த இடத்தில் ஏழை மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என எண்ணி, மூன்று வருடங்களாக மரங்களையெல்லாம் அகற்றி, இதனை ஒரு கல்வி சாலையாக மாற்றினார்.

தமிழகத்தில் விழுப்புரம் கல்வியில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகவும், மது விற்பனையில் முதலாவதாகவும் உள்ளது. நானும் மருத்துவர் ஐயா அவர்களும், இதே விழுப்புரம் மாவட்டத்தில் தான் படித்து பட்டம் பெற்றோம். மாணவர்களாகிய நீங்கள் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல், கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதுவே மருத்துவர் ராமதாஸ் ஐயாவின் கனவு. அதனை நிறைவேற்றுங்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: மாஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்; ரஷ்யாக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி ஆறுதல் - 2024 Crocus City Hall Attack

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.