ETV Bharat / state

ஸ்ரீ வைகுண்டத்தில் காணாமல் போனவரை மூன்று மாதத்திற்குப் பின் திண்டுக்கல்லில் மீட்ட தனிப்படை போலீசார்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 5:28 PM IST

Etv Bharat
Etv Bharat

Srivaikuntam missing person: கடன் தொல்லை காரணமாகத் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே வீட்டை விட்டு வெளியேறிய நபரை, மூன்று மாதங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் போலீசார் மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி தேவர்சந்து பகுதியைச் சேர்ந்தவர், முருகன் மகன் கணேசன். இவர் வல்லநாட்டில் உள்ள ஹோட்டலில் டீ மாஸ்டராக இருந்து வந்தார். கடந்த 16.11.2023 அன்று வேலைக்குச் சென்ற இவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது போனுக்கும் தொடர்பு கிடைக்காமலிருந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் ஸ்ரீ வைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து, ஸ்ரீ வைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து கணேசனைத் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 15.11.23 அன்று வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் விவசாயி மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு மறுநாளிலிருந்து கணேசன் காணவில்லை. அந்த கொலை சம்பவம் இரு சமுதாயத்தினரிடையே நடந்தது என்பதால் கொலை செய்யப்பட்ட தரப்பினர் கணேசனை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதனால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் பெட்ரிக் தலைமையிலான போலீசார் கணேசனின் செல்போன் சிக்னல் மூலம் தேடிவந்தனர்.

இந்த நிலையில், கணேசன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலைப்பார்த்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்தவுடன் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் பெட்ரிக் தலைமையிலான போலீசார் மூன்று மாத காலத்திற்குப் பின்னர் அங்குச் சென்று அவரை மீட்டனர். இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை காரணமாக செல்போனை அணைத்து வைத்து விட்டு பழனியில் உள்ள ஹோட்டலில் வேலைப்பார்த்து வந்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவரைத் தனிப்படை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த சம்பவம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிவில் நீதிமன்ற நீதிபதியான விஏஓ லூர்து பிரான்சிஸ் மகன்... தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.