ETV Bharat / state

தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு: 2 ரயில்களை காப்பாற்றிய முதியவருக்கு குவியும் பாராட்டுகள்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 6:58 AM IST

Updated : Feb 27, 2024, 2:29 PM IST

A major train accident tragedy Avoided
தென்காசி அருகே ரயில் விபத்து

A major train accident tragedy Avoided: தென்காசி அருகே புளியரையில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை, டார்ச் லைட் அடித்து அவ்வழியாக வந்த ரயிலை நிறுத்திய வயதான சண்முகையா-வடக்குத்திம்மாள் தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தென்காசி அருகே பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு -

தென்காசி: கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடிக்கு பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள எஸ் வளைவுப் பகுதி அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரியானது எஸ் வளைவு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கவிழ்ந்து, விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அதே சமயத்தில் நெல்லையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

அதனைப் பார்த்த புளியரை பகுதியை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மனைவி வடக்குத்திம்மாள் ஆகியோர் நபர் எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என ஓடிச் சென்று சற்று தொலைவில் வைத்து டார்ச் லைட் அடித்து சிக்னல் காண்பித்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

இதனால் மிகப்பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி முழுவதும் சேதமடைந்த நிலையில், லாரின் டிரைவரான முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், லாரியின் கிளீனர் விபத்தின் போது தக்க சமயத்தில் கீழே குதித்து உயிர்தப்பிய நிலையில், உடனடியாக புளியரை சோதனைச் சாவடியில் இருந்து புளியரை போலீசாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புளியரை போலீசார், தென்காசி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ரயில் தண்டவாளப் பகுதியில் லாரியானது விபத்துக்குள்ளான நிலையில், அதனை சரிசெய்யும் முயற்சியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, செங்கோட்டையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரயிலும், சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற ரயிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து லாரியானது அப்புறப்படுத்தப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மகத் தேரோட்டம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Last Updated :Feb 27, 2024, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.