ETV Bharat / spiritual

மாசி மகா சிவராத்திரி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 10:53 AM IST

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழா, மாசி மகா சிவராத்திரியையொட்டி நேற்று (மார்ச் 08) தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன்

தேனி: பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் மூலஸ்தனத்தின் கதவு திறக்கப்படுவதில்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோயிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி விழா அன்று தொடங்கி 7 நாட்களுக்கு திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாவிற்கு, கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாசி மகா சிவராத்திரியில் திருவிழா தொடங்கியது.

முதல் நாள் திருவிழாவான நேற்று, கோயிலின் அருகே உள்ள மஞ்சளாறு ஆற்றில் காமாட்சி அம்மன், மூங்கில் பெட்டியில் குழந்தையாக மிதந்து, மலர்களால் அலங்கரித்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், செங்கரும்பு கட்டுகளை காணிக்கையாக கொடுத்தும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். கோயில் திருவிழாவையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று தொடங்கிய திருவிழாவானது வருகிற 15 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.

இத்திருவிழாவிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மருத்துவ வசதி, அன்னதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் 40 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவிழாவில் பக்தர்களின் கூட்டத்தை சீர் செய்வதற்காக பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெளியூர் பக்தர்கள் வந்து செல்வதற்காக பெரியகுளம், வத்தலகுண்டு பகுதியில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பாக இயக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.