ETV Bharat / international

கனமழையால் தத்தளிக்கும் ஆப்பிரிக்க நாடுகள்! கென்யாவில் அணை உடைந்து 45 பேர் பலி! - Kenya Dam Collapse

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 10:06 PM IST

Etv Bharat
Etv Bharat

கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்த விபத்தில் ஏறத்தாழ 45 பேர் உயிரிழந்தனர்.

நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய பகுதிகள் துண்டிக்கப்பட்டு தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. வெள்ளம் நீர் சூழ்ந்து குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர். இதனிடையே, கென்யாவில் உள்ள மிகப் பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது.

தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 45 பேர் வரை பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன 49 பேரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். காணும் இடம் எல்லாம் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறி உள்ளனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நைவாஷா மற்றும் நரோக், மேற்கு நைரோபி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக காட்சி அளிக்கின்றன. இதுவரை கென்யாவில் கனமழை பெருவெள்ளம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளத்தால் 155 பேர் வரை உயிரிழந்ததாகவும் 2 லட்சம் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொடர் பேரிடர்கள் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு உள்ளன.

தொடர் கனமழை காரணமாக கென்யாவில் மட்டும் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், வடக்கு கென்யாவின் கரிசா மாகாணத்தில் படகு கவிழந்த விபத்தில் நீரில் தத்தளித்த 23 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும். பலர் காணாமல் போனதால் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: விசாரணைக்கு ஆஜராவதில் காலஅவகாசம் கோரும் தமன்னா! என்ன காரணம்? - Mahadev Betting App Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.