நந்தியால்: ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம், அலகட்டா மண்டலத்தின் நல்லகட்டா பகுதியில் இன்று(06.03.2024) சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது அசுரவேகத்தில் வந்த கார் ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கரமான விபத்தில் காரில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தின் மேற்கு வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
திருப்பதி வெங்கடலாஜலபதி கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று விட்டு, வீடு திரும்பும் வழியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 6 நாட்களுக்கு முன்பு, (பிப்.29) திருமணம் ஆகிய இளம் ஜோடியாகிய பாலகிரண் மற்றும் காவ்யா ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்கள் ஆந்திராவின் தெனாலி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
பின்னர், இவ்விருவருக்கும் மார்ச் 3ஆம் தேதி, ஷாமிர்பேட்டை பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த விபத்தில் ஒரு சிறுவன் உட்பட பாலகிரணின் பெற்றோர் ரவிக்குமார், லட்சுமி ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பீகார் சாலை விபத்து: சாலையில் பறிபோன 9 உயிர்! எப்படி நடந்தது?