ETV Bharat / bharat

"வனவிலங்குகளுக்கு மாநில எல்லை என்ற ஒன்றே கிடையாது"- 3 மாநில ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 4:32 PM IST

Etv Bharat
Etv Bharat

வனவிலங்குகளை பாதுகாப்பதில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் சிறப்பாக செயல்படுகின்றன எனவும், அதனால்தான் இந்த மாநிலங்களில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே தெரிவித்துள்ளார்.

பந்திப்பூர்: ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள்தொகை, காடுகள் ஆக்கிரமிப்பு, வனப்பகுதியில் உருவாகும் கட்டுமானங்கள், வனங்கள் அழிக்கப்படுதல் உள்ளிட்டவற்றால், காடுகளை புகலிடமாகக் கொண்டு வாழும் வனவிலங்குகள் வேறு வழியின்றி உணவுக்காகவும், நீருக்காகவும் காட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது.

இது போன்ற சூழ்நிலையில், மனித-விலங்கு மோதல்களைக் குறைப்பதற்கும், வன விலங்களை பாதுகாப்பது குறித்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்கள் இணைந்து ஒரு ஆலோசனைக் கூட்டம் கூட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று (மார்ச் 10) கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் சஃபாரி வரவேற்பு மையம் அருகே இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, கேரளா வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 3 மாநில வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஈஸ்வர காந்த்ரே பேசுகையில், "மத்திய அரசின் உத்தரவின் பேரில் இந்த கூட்டம் நடைபெறவில்லை. தென்னிந்திய மூன்று மாநிலங்களின் வனவிலங்குகளையும், வனத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை மற்றும் சுயமுயற்சியால் உருவான கூட்டம் இது" என்றார்.

மேலும், “பொதுவாக வனத்தில் வாழும் மிருகங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கின்றன. தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே பல நூறு ஆண்டுகளாக யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு மாநில எல்லை என்று ஒன்றும் கிடையாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கூடிய விரைவில் வன விலங்குகளால் ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் பயிர் சேதம் ஆகியவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து விவாதிக்கப்பட்டு, விரைவில் அதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும்.

வனவிலங்குகளை பாதுகாப்பதில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களாலும் சிறப்பாகச் செயல்படுகின்றன. அதனால்தான் இந்த மாநிலங்களில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது போன்ற முயற்சிகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது, வன விலங்குகள் வேட்டையாடுவதைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கபட்டது.

இதையும் படிங்க: "தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் திறக்க முடியாது... தண்ணீர் திறந்து விட முட்டாள்கள் அல்ல"- டி.கே.சிவக்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.