தமிழ்நாடு

tamil nadu

உயிரோடு இருந்த முதியவருக்கு இறப்புச்சான்று: அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

By

Published : Nov 22, 2022, 10:55 PM IST

உயிரோடு இருந்த முதியவருக்கு இறப்பு சான்று

விழுப்புரம் மாவட்டத்தில் உயிரோடு இருந்த முதியவருக்கு இறப்புச்சான்று வழங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்: மரக்காணம் அருகே கேசவநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சேகர்(63) ஓய்வூதியத் தொகை வழங்க கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி மனுவை நிராகரித்து சான்று அளிக்கப்பட்டதாக மரக்காணம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரோடு இருக்கும் தன்னிடமே உயிரிழந்துவிட்டதாக கூறியதால் முதியவர் அதிர்ச்சியடைந்தார்.

இந்த செய்தி பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதியவர் சேகர் உயிரிழந்துவிட்டதாக சான்று வழங்கிய விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, திண்டிவனத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதுப்பாக்கம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் பிரபு, மரக்காணம் வருவாய் ஆய்வாளர் தினகரன் ஆகியோரிடம் திண்டிவனம் சார் ஆட்சியர் ரவி தேஜா கட்டா விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, அதிகாரிகள் இருவரும் எழுத்துப் பூர்வமாக வரும் 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்; அதனைத்தொடர்ந்து வரும் 26ஆம் தேதி மீண்டும் மறு விசாரணைக்‍கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் திண்டிவனம் சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பென்ஷன் கேட்ட விவசாயி.. இறந்தவர்கள் லிஸ்ட்டில் பெயரைக்காட்டிய ஆபிஸர்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details