ETV Bharat / state

கூலிப்படையை பதுக்கி வைத்த தூத்துக்குடி பாஜக பிரமுகர்.. இரண்டாவது மனைவி விவகாரத்தில் நடந்தது என்ன? - THOOTHUKUDI CRIME

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 3:09 PM IST

THOOTHUKUDI CRIME
THOOTHUKUDI CRIME

THOOTHUKUDI CRIME: தூத்துக்குடியில் பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான பால பொய் சொல்லான் தனது இரண்டாவது மனைவியுடன் பழகிய நபர் மீது தாக்குதல் நடத்த கூலிப்படையை அழைத்து வந்து தங்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்தவர் பால பொய் சொல்லான். தொழிலதிபரான இவர், பாரதிய ஜனதா கட்சியில் வணிகர் பிரிவு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பால பொய் சொல்லணும், அவரது இரண்டாவது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பால பொய் சொல்லான் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபாகம் காவல் நிலையத்தில் அவரது இரண்டாவது மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பால பொய் சொல்லானின் இரண்டாவது மனைவிக்கும், அவரது வீடு அருகே வசித்து வரும் அந்தோணிசாமி என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தோணிசாமியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, தனது இரண்டாவது மனைவி தனக்கு எதிராக செயல்படுவதாக எண்ணிய பால பொய் சொல்லான், அந்தோணிச்சாமியை கூலிப்படை மூலம் தாக்குதல் நடத்த எண்ணியதாக கூறப்படுகிறது.

மேலும், இது குறித்து தூத்துக்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், நேற்று தனிப்படை போலீசார் தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள பால பொய் சொல்லானுக்குச் சொந்தமான ஒரு இடத்தை சோதனை செய்துள்ளனர். அப்போது, அங்கே பதுங்கி இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படை நபர்கள் 6 பேரை கைது செய்தனர்‌. மேலும், அவர்களிடமிருந்து வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதில், போலீசார் நடத்திய விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, முத்தழகு, விஜய், வல்லரசு, சந்தன பாண்டி, சக்திவேல் ஆகிய ஆறு பேர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், பால பொய் சொல்லான் அந்தோணிசாமி மீது தாக்குதல் நடத்துவதற்காக தங்களை விருதுநகரில் இருந்து அழைத்து வந்து தங்க வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வடபாகம் போலீசார் கூலிப்படையைச் சேர்ந்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபர்களுக்கு பாஜக துணை" - கரூர் எம்.பி ஜோதிமணி காட்டம்! - Karur MP Jothimani

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.