தமிழ்நாடு

tamil nadu

கற்பித்தலில் புதுமை: எட்டாக் கனியாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்...!

By

Published : Sep 3, 2020, 8:11 PM IST

Updated : Sep 3, 2020, 10:49 PM IST

கிராமப்புற மாணவர்களின் ஆங்கில வாசிப்பு மற்றும் எழுதும் திறனை மேம்படுத்துவதில் செய்த பங்களிப்புக்காக தேசிய நல்லாசிரியர் விருது பெறவுள்ள விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் திலீப் பற்றிய சிறப்புத் செய்தி தொகுப்பு.

கற்பித்தலில் புதுமை
எட்டாக் கனியாக இருக்கு ஆங்கிலத்தை எளியாக கற்பிக்கு அரசு பள்ளி ஆசிரியர்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் கல்வி பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான 'தேசிய நல்லாசிரியர் விருது'க்கு நாடு ழுழுவதும் இருந்து 47 ஆசிரியர்களை மத்திய கல்வி அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் திலீப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி தில்லி விக்யான் பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த விருதினை வழங்க உள்ளார். இதில் ஆசிரியர் திலீப் மாணவர்களின் கற்றல் திறனை எளிமையாக்க பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

இவர் தனது மாணவர்களுக்கு புதுமையான முறையில் ஆங்கிலத்தை முழுமையாக கற்றுக்கொடுக்கிறார். ஒரு எழுத்து, அதில் தொடங்கும் ஒரு பழத்தின் பெயர், அதில் ஒரு வார்த்தை, ஒரு வாக்கியம், ஒரு பாரா என மாணவர்களை எழுத பழுக்குகிறார். இதன் மூலம் மாணவர்களின் உச்சரிப்பு, எழுத்து திறமை, மொழியறிவு, சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கற்றல் திறன் எளிமையாக்கப்படுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக தனது பணியை தொடங்கிய இவர், தனது இருபது ஆண்டு கல்வி பணியில் பல விருதுகளை வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2012ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதினை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் பெற்றுள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான விருதை அப்போதைய விழுப்புரம் ஆட்சியரிடமும், 2019இல் தமிழ்நாடு அரசின் கனவு ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.

இது குறித்து ஆசிரியர் திலீப் கூறுகையில், “தேசிய நல்லாசிரியருக்கான விருதில் எனது பெயர் இடம்பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி. இந்த விருதினை என்னுடைய மாணவர்கள், அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன். மாணவர்களின் தேவையை அறிந்து வழங்குவதில் நிறைய புதுமைகளை புகுத்தியுள்ளேன். மாணவர்கள் புத்தகத்தை தாண்டிய கல்வியை அறிந்துகொள்ளும் போது அவர்களது எதிர்காலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆர்வத்துக்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

கற்பித்தலில் புதுமை

மேலும் மாணவர்களிடம் உள்ள திறமையை கண்டறிந்து வளர்தெடுப்பது மிகவும் அவசியமானது. கல்வி என்பது வேலைக்கானது என எண்ணாமல் அறிவை விசாலமாக்குவதற்கு என உணர்ந்து படிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பாடத்தில் ஆழ்ந்து, உணர்ந்து, சிறந்து விளங்கும் போது வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். மதிப்பெண்களுக்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. உங்களுடைய எண்ணத்தை நோக்கி கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். என்னுடைய இருபது ஆண்டுகால அனுபவத்தில் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதே இல்லை. இன்முகத்துடனே மாணவர்களிடம் பழகுவேன். இதுவும் எனது வெற்றிக்கு ஒரு காரணம்” என்கிறார்.

இதையும் படிங்க...செமஸ்டருக்கான கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்!

Last Updated :Sep 3, 2020, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details