தமிழ்நாடு

tamil nadu

கோவில்பட்டியில் பயணிகளை பாதியிலே இறக்கிவிட்ட அரசுப் பேருந்து!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 2:14 PM IST

TN Bus Strike: தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, தமிழகத்தில் பரவலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி செல்லும் பேருந்து, பயணிகளை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டியில் பயணிகளை பாதி வழியில் இறக்கிவிட்டதால் கடும் அவதி
கோவில்பட்டியில் பயணிகளை பாதி வழியில் இறக்கிவிட்டதால் கடும் அவதி

கோவில்பட்டியில் பயணிகளை பாதி வழியில் இறக்கிவிட்டதால் கடும் அவதி

தூத்துக்குடி: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளன.

பேருந்துகள் இயக்கம்:இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பணிமனையில் 65 பேருந்துககள் இயக்கப்படும் நிலையில், 64 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விளாத்திகுளம் பணிமனையில் வழக்கம் போல 33 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவில்பட்டியைப் பொறுத்தவரை, அண்ணா பேருந்து நிலையம் மற்றும் கூடுதல் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகள் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் வழியாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன.

கோவில்பட்டி நகர் பகுதியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், மதுரையில் இருந்து வழக்கமாக திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. வழக்கமாக மதுரையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து, கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் வழியாகச் செல்லும்.

1 மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து: குறிப்பாக, பைபாஸ் ரைடர் (Bypass Rider) என்று அழைக்கப்படும் சில முக்கிய நிறுத்த பேருந்துகள் செல்வது வழக்கம். போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக இன்று காலையிலிருந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் மதுரையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வருகின்றன. இதனால் பயணிகள் வெகு நேரம் காத்திருந்து, செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

சென்னையிலிருந்து வரக்கூடிய அரசு விரைவுப் பேருந்து அதிகமாக வருவதாகவும், வழக்கமாக மதுரையில் இருந்து இயக்கக்கூடிய பேருந்துகள் வராததால், நீண்ட நேரம் காத்திருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளதாக‌ பயணிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில் மதுரையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று, திருநெல்வேலிக்குச் செல்லாமல் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு நின்றது.

பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்:மேலும் அப்பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பயணிகளிடம் இப்பேருந்து திருநெல்வேலி செல்லாது எனவும், வேறு பேருந்து மூலமாக திருநெல்வேலிக்குச் செல்லவும் என்று கூறியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின் வேறு வழியில்லாமல் மாற்று பேருந்து மூலம் திருநெல்வேலிக்குச் சென்றனர்.

தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மக்களின் நலன் கருதி, தமிழகத்தில் பரவலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி செல்லும் பேருந்து, பயணிகளை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கோவில்பட்டி கனமழையால் நிறுத்தப்பட்ட மினி பஸ்; மீண்டும் இயக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்..!

ABOUT THE AUTHOR

...view details