தமிழ்நாடு

tamil nadu

'தீரன்' பட பாணியில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தலைவன் கைது.. போலீசாருக்கு குவியும் வாழ்த்து!

By

Published : May 5, 2023, 11:48 AM IST

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய நபர் ஹரியானாவில் கைது - ரூ.15 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய நபர் ஹரியானாவில் கைது - ரூ.15 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்ட தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஆசிப்ஜாவேத் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளது.

'தீரன்' பட பாணியில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையனை கைது செய்த போலீசாரின் வீடியோ

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, தொடர்ந்து நான்கு ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி 72 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம், ஒரு கார், ஒரு கண்டைனர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

முதல் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நபரை தேடும் பணியில் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக இறங்கி வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய ஆய்வாளர் புகழ் தலைமையில் 6 உதவி ஆய்வாளர்கள் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய முதல் குற்றவாளியாக கருதப்படும் ஆசிப்ஜாவேத் என்பவர் ஹரியானா மாநிலத்தின் ஆரவல்லி மலைப்பகுதிக்கு இடையே பாழடைந்த கட்டடத்தில் மறைந்திருப்பதாக தனிப்படை காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் கடந்த ஒரு வாரமாக காவல் துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து, பல்வேறு சவால்களுக்கு இடையே அந்த கட்டடத்தில் மறைந்து இருந்து முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆசிப்ஜாவேத் என்பவரை துப்பாக்கி முனையில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அப்போது, அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில், இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 கார்கள், ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவ்கை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்!

ABOUT THE AUTHOR

...view details