ETV Bharat / state

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்!

author img

By

Published : Mar 6, 2023, 8:06 AM IST

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு
தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு

திருவண்ணாமலை: கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று நள்ளிரவில், திருவண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, தேனிமலை, கலசப்பாக்கம் மற்றும் போரூர் ஆகிய நான்கு இடங்களில் அமைந்துள்ள ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் நடந்தது. அதில் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மேலும் கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் எந்திரங்களை உடைத்து பணத்தை திருடியதோடு, தாங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, கைரேகை மற்றும் வீடியோ பதிவை அழிக்கும் பொருட்டு, ஏடிஎம் எந்திரம் மற்றும் சிசிடிவி கேமராவை தீ வைத்து எரித்துச் சென்றனர். ஒரே நாளில், ஒரே பாணியில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் தடையங்கள் அழிக்கப்பட்டதால், காவலர்களுக்கு இந்த வழக்கு பெரும் சவாலாக அமைந்தது. இந்த கொள்ளை வழக்கு தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் வாகனத் தணிக்கை, தங்கும் விடுதிகளில் ரைடு, சுங்கச்சாவடி சோதனை என தமிழ்நாடு காவல் துறையே பரபரப்பானது.

இந்நிலையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவின் பெயரில், வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில், ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கிடைத்த சில ஆதாரங்களை கொண்டு, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அன்று, ஹரியானா மாநிலத்தில் இருந்து முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரையும் திருவண்ணாமலை தனிப்படை போலீசார் கைது செய்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக திருவண்ணாமலை அழைத்து வந்து மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரையும் 13 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர்களை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அன்று, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குதரத்பாஷா மற்றும் அப்சர் உசேன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து திருவண்ணாமலை அழைத்து வந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி கவியரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதிய தனிப்படை போலீசார், பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு கொள்ளையர்கலை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி நிஜாமுதீன் என்பவரை கடந்த மார்ச் 2ஆம் தேதி அன்று கோலார் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த மூன்று நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நேற்று (மார்ச் 5) நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1-ல் நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார், நிஜாமுதினை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்று தனிப்படை போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மகனை சித்திரவதை செய்து கை, கால்களை முறித்த கொடூர தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.