தமிழ்நாடு

tamil nadu

ராக்கெட் ராஜவுக்கும் ஹரி நாடாருக்கும் உச்சக்கட்ட தகராறு: மலேசிய பெண்ணுடனான டீலிங்தான் காரணமா?

By

Published : Sep 24, 2021, 12:09 PM IST

harinadar-connection-with-malaysian-lady-and-fight-with-rocket-raja

என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை வெளியே வர விடாமல் தடுக்க எனது மனைவி மூலம் பொய் புகார் அளித்துள்ளனர் என சிறையில் இருந்தபடி ஹரி நாடார் நெல்லை எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திருநெல்வேலி:பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். தொழிலதிபரான இவர், கை, கழுத்து முழுவதும் கிலோ கணக்கில் நகைகள் அணிந்து நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர்.

குறிப்பாக, நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்தவர்.

இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வங்கியில் பல லட்சம் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அம்மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஹரி நாடார் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறையில் இருந்தபடி தனது வழக்கறிஞர் மூலம் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ஹரி நாடார் பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், "நான் கடந்த மே மாதம் முதல் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருகிறேன். எனது மனைவி ஷாலினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மனைவி பொய்புகார்

நான் சிறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க நான் சார்ந்த கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் நான் வெளியே வராமல் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.

மலேசிய பெண் தொழிலதிபர் மஞ்சுவுடன் ஹரி நாடார்

இந்தச் சூழ்நிலையில்தான் மலேசியாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் மஞ்சு என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க அனைத்து விதமான சட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் எனது மனைவி ஷாலினி உங்களிடம் அளித்துள்ள புகார் மனுவில், பெண் தொழிலதிபர் மஞ்சு என்னை மிரட்டி கட்டாயப்படுத்தி வைத்திருப்பதாகவும், நான் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் என்னை மஞ்சுவிடம் இருந்து மீட்டுத் தரும்படியும் கூறியிருப்பதை எனது வழக்கறிஞர் மூலம் அறிந்து கொண்டேன் எனது மனைவி அளித்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.

மலேசிய பெண் தொழிலதிபருடன் ஹரி நாடாருக்கு தொடர்பு?

எனது விவகாரத்து வழக்கை முறியடிப்பதற்கும் நான் சிறையில் இருந்து வெளியே வராமல் தடுப்பதற்கும் எனது மனைவி மூலம் நான் சார்ந்த கட்சியினர் இதுபோன்று பொய் புகார் அளித்துள்ளனர். எனவே, எனது மனைவி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் மலேசிய பெண் தொழிலதிபர் மஞ்சுவிடம் விசாரணை நடத்தத் தேவையில்லை.

மலேசிய பெண் தொழிலதிபர் மஞ்சுவுடன் ஹரி நாடார்

அந்தப் புகாரை முடித்து வைக்க வேண்டும், தேவைப்பட்டால் நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் உங்களிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்" என்று கூறியுள்ளார்.

ஹரி நாடார் தனது குடும்ப பிரச்னை காரணமாக இந்த மனுவை எஸ்பியிடம் அளித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம், தான் சார்ந்திருக்கும் கட்சி தன்னை கைவிட்டதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராக்கெட் ராஜா X ஹரி நாடார்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவுடன் இணைந்து ஹரி நாடார் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டார். தேர்தலில் மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் ராக்கெட் ராஜாவுக்கு, ஹரி நாடார் பக்கபலமாக இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை தலைமறைவாக இருந்த ராக்கெட் ராஜா, அரசியல் செல்வாக்கு, ஹரி நாடார் போன்றோரின் பண பலம் ஆகியவற்றால் சில காலம் வெளியே நடமாடிவந்தார்.

இந்தச் சூழ்நிலையில், சிறையிலிருக்கும் தன்னை வெளியே எடுக்க கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹரி நாடார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நண்பர்கள்போல செயல்பட்டு வந்த ராக்கெட் ராஜா, ஹரி நாடார் இடையே பிளவு ஏற்பட்டிருப்பது அவர்கள் சார்ந்த சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆலங்குளத்தில் நிற்கும் ஹரி நாடார் : யார் இந்த நடமாடும் நகைக்கடை?

ABOUT THE AUTHOR

...view details