தமிழ்நாடு

tamil nadu

நாங்குநேரி மாணவரைக் காண மருத்துவமனைக்கு திடீர் விஷிட் கொடுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 8:01 PM IST

Minister Anbil Mahesh Poyyamozhi: திருநெல்வேலியில் சாதிய பிரச்சனையால், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்.26) மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.

நாங்குநேரி மாணவரை நேரில் சந்தித்த  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
நாங்குநேரி மாணவரை நேரில் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த அம்பிகாவதி என்பவரின் மகன், வள்ளியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆக.9 ஆம் தேதி இவருடன் படித்து வரும் சக மாணவர்கள் மூன்று பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அம்பிகாவதியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரது மகனைச் சரமாரியாகத் தாக்கினர். தடுக்கச் சென்ற மாணவரின் தங்கையையும் தாக்கிவிட்டு அக்கும்பல் தப்பி ஓடியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இது குறித்துக் காவல் துறையினரின் விசாரணையில் சாதிய பிரச்சனையால் அம்பிகாவதி மகனை, அவருடன் படித்து வரும் சக மாணவர்களே கொடூரமாகத் தாக்கியது தெரியவந்தது. குறிப்பாகப் பாதிக்கப்பட்ட மாணவரை வேறு சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து சாதி ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதை மாணவன் மற்றும் அவரது தாய் அம்பிகாவதி பள்ளி நிர்வாகத்திடம் புகாராகத் தெரிவித்த காரணத்தினால், ஆத்திரமடைந்த சக மாணவர்கள் திட்டமிட்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இது குறித்து, நாங்குநேரி காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். மாணவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது தங்கை இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டையில் இன்று (அக்.26) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி சென்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திடீரென பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் மற்றும் அவரது தங்கை இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், மாணவரின் தாய் அம்பிகாவதிக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். ஏற்கனவே, இச்சம்பவம் நடைபெற்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் நாங்குநேரி சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு மாணவரின் கல்விச் செலவை ஏற்பதாகவும் உருக்கமாக பேசியிருந்தார். வீடியோ மூலம் ஆறுதல் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது அமைச்சர் இன்று (அக்.26) மாணவரை நேரில் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:“தமிழக அரசின் நீட் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்” - சகாயம் ஐஏஎஸ்

ABOUT THE AUTHOR

...view details