சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை முடிந்து விடுதலையான சசிகலாவினை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டில் அமமுகவினர் ஆங்காங்கே ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டினர். இவர்களுடன் அதிமுகவிலும் சிலர் சசிகலாவிற்காக சுவரொட்டிகள் ஒட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது புகைப்படம், பெயர் விவரங்களுடன் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சசிகலாவை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதிமுக கிளை செயலாளராகவும், அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்து வரும், இவரது பெயர், புகைப்படத்துடன் கூடிய அந்த சுவரொட்டியில், “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்.. அஇஅதிமுகவை வழிநடத்த வருகை தரும் பொதுச்செயலாளர் சின்னம்மா“ என சசிகலா புகைப்படத்துடன், ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரது படங்களையும் அச்சிட்டு ஆண்டிபட்டி நகர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.