நீலகிரி:தமிழகத்தில் மலை சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான ஒன்று நீலகி. இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு தமிழக அரசு சார்பில் தாவரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, ரோஜா பூங்கா என ஏராளமான பூங்காக்கள் அமைக்கப்பட்டு, மக்களை கவரும் வண்ணம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கு நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்தே காணப்படும். தற்போது தொடர்ந்து நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்து உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி, சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க், கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.